அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட பின் 3 முறை ஹைதராபாத்துக்கு எச்சரிக்கை விடப்பட்டது!
ஹைதராபாத் நகரம் தீவிரவாதிகளின் இலக்காக இருந்து வருகிறது. 2002, 2007ஆம் ஆண்டுகளில் ஹைதராபாத் நகரம் குண்டுவெடிப்பு சம்பவங்களை எதிர்கொண்டது. தற்போதும் அத்தகைய கோர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
அண்மையில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து ஹைதராபாத் நகரை தீவிரவாதிகள் இலக்கு வைக்கலாம் என்று மத்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரித்திருந்தன. இது குறித்து மூன்று முறை எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டிருந்தன. இது பற்றி ஆந்திர மாநில போலீசாரும் மத்திய புலனாய்வு அமைப்பினரும் ஆலோசனையும் நடத்தியிருக்கின்றனர். கடந்த 16,19, 20 ஆகிய தேதிகளில் இந்த எச்சரிக்கையை ஆந்திர மாநில அரசும் பெற்றிருக்கிறது. குறிப்பாக இந்திய முஜாஹிதீன் அமைப்புதான் தாக்குதலை நடத்தப் போவதாகவே உள்துறை அமைச்சகமும் எச்சரித்திருக்கிறது.
இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவத்தை தடுக்க முடியாதது பற்றி உள்ளக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு ஜம்மு காஷ்மீரைத் தவிர ஹைதராபாத்தில்தான் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதனாலேயே எச்சரிக்கை விடப்பட்டதாகவும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியிருக்கின்றன.