சென்னையிலிருந்து பெங்களூருக்கு இனி 'டபுள் டெக்கர்' ரயிலில் போகலாம்... ஜில்லுன்னு!
சென்னை: சென்னை, பெங்களூர் இடையிலான டபுள்டெக்கர் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நேற்று நடந்தது.
சென்னை - பெங்களூர் மார்க்கத்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு டபுள் டெக்கர் ரயில் இயக்கப்பட்டது. பின்னர் அது நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது மீண்டும் இந்த சேவையை தொடங்கவுள்ளது ரயில்வே. இப்போது இயக்கப்படவுள்ளது முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்டதாகும்.
நேற்று இந்த ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இதையடுத்து விரைவில் இந்த ரயில் தொடங்கி வைக்கப்படும்.
1500 பேர் பயணிக்கலாம்
இந்த டபுள்டெக்கர் ரயிலில் 1500 இருக்கைகள் முன்பதிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை பெங்களூர் மார்க்கம் எப்போதும் நிரம்பி வழியும் என்பதால் இந்த ரயில் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
ஜிபிஎஸ் சாதனம் பொருத்தப்பட்டது
இந்த ரயிலில் பல அதிநவீன வசதிகள் பொருத்தப்பட்டு்ள்ளன. அதாவது ரயில் எங்கே போகிறது, வேகம் என்ன, அடுத்த நிலையத்திற்கு இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை அறிய ஜிபிஎஸ் அடிப்படையில் இயங்கும் மின்னணு தகவல் பலகை அனைத்துப் பெட்டிகளிலும் பொருத்தப்பட்டுள்ளது.
மல்ட்டிபிள் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டது
இந்த ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் மல்ட்டிபிள் ஷாக் அப்சார்பர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில் பெட்டிகளில் எந்தவித அலுங்கலும், குலுங்கலும் இல்லாமல் பயணிகள் பயணிக்கலாம். அதேபோல அனைத்துப் பெட்டிகளிலும் தீயணைப்புக் கருவிகளும் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கோச்சிலும் குட்டி கேன்டீன்
இந்த ரயிலின் இன்னொரு விசேஷம், ஒவ்வொரு கோச்சிலும் சின்னதாக ஒரு கேன்டீன் இருப்பது. அங்கு ஜில் தண்ணீர், டீ, குளிர்பானம், சூப், ஐஸ்கிரீம் போன்றவை கிடைக்கும்.
உள்ளேயே மாடிப்படி
ஒவ்வொரு பெட்டியிலும் 2 தளங்கள் உள்ளன. மேல் தளத்திற்குப் போவதற்கான படிக்கட்டுகள் அந்தந்த கோச்சுகளிலேயே உள்ளன.
மணிக்கு 160 கிமீ வேகம்
இந்த ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியதாகும். சென்னையிலிருந்து பெங்களூர் 362 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த பயண தூரத்தை 6 மணி நேரத்தி்ல ரயில் கடக்கும்.
முதல் ரயில் ஹவுராவுக்கு
ஏசி டபுள் டெக்கர் ரயில் முதலில் ஹவுரா- தான்பாத் இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் டெல்லி -ஜெய்ப்பூர் இடையேயும், அதன் பிறகு அகமதாபாத்-மும்பை இடையேயும் விடப்பட்டன. தற்போது சென்னை - பெங்களூர் இடையே அறிமுகமாகிறது.