மார்ச் 7ல் டெல்லியில் டெசோ சார்பில் அகில இந்திய மாநாடு, கருத்தரங்கம்: கி. வீரமணி

டெசோ ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் முக ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன், திக தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், டி.ஆர். பாலு எம்.பி., சுப. வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், க. பூங்குன்றம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு வீரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான சிங்கள கொடுங்கோல் அரசு ஈழத் தமிழர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை சிங்கள ராணுவம் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளது.
இலங்கை அரசை கண்டித்து வரும் மார்ச் 5ம் தேதி காலை சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று டெசோ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் டெசோ அமைப்பு சார்பில் வரும் மார்ச் 7ம் தேதி டெல்லியில் அகில இந்திய அளவில் மாநாடு மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படும். இந்த மாநாட்டிற்கு யாரை எல்லாம் அழைப்பது, என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றுவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications