ஜெனீவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி திமுக எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
டெல்லி: ஜெனீவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இனப்படுகொலை செய்த இலங்கையைத் தண்டிக்க உதவ வேண்டும, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் கொடூர மரணத்திற்குக் காரணமான ராஜபக்சேவைத் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகம் முன்பு திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை கண்டித்தும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலைக்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இன்று சென்னையில் டெசோ அமைப்பு சார்பில் மு.க. ஸ்டாலின் தலைமையில் இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் ஜெனீவா தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும் என்று கோரி திமுக எம்பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகம் முன்பு உள்ள காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், செல்வ கணபதி, ஜெபத்துரை, வசந்தி ஸ்டான்லி உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி. கூறுகையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வற்புறுத்தியும், பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு இதை கொண்டு வருவதற்காகவும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம் என்றார்.