லஞ்ச விவகாரம்: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மகன்கள் சிபிஐ முன்பு ஆஜர்
சென்னை: பல் மருத்துவக் கல்லூரியில் மேல்படிப்புக்கு அனுமதி வழங்க, லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் மகன்கள் இருவரும் சிபிஐ அதிகாரிகள் முன்பு இன்று ஆஜராகினர்.
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனிலுள்ள அலுவலகத்தில் ஆஜரான அவர்களிடம், சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் மேல்படிப்புக்காக அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், போதிய வசதிகள் இல்லாததால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, இந்திய பல் மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, கடந்த ஜனவரி 7ஆம் தேதி 25 லட்ச ரூபாய் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில், பங்காரு அடிகளாரின் மனைவி மற்றும் இரு மகன்களும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிபதிகள், நிபந்தனை ஜாமீன் வழங்கினர். அந்த நிபந்தனையின்படி, செந்தில் குமார் மற்றும் அன்பழகன் இருவரும் இன்று சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராகி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர்.