டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இனி தமிழுக்கு இடமில்லை: குரூப் 2, விஏஓ தேர்வில் தமிழ் பாடம் நீக்கம்
சென்னை: ஐஏஎஸ் உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணிகளுக்கு தமிழில் தேர்வு எழுதுவதைத் தடுக்கச் செய்ய பெரும் மோசடியில் மத்திய அரசு தேர்வாணையம் ஈடுபட்டுள்ள நிலையில், மாநில அரசின் தேர்வாணையானமான டிஎன்பிஎஸ்சி-யும் தமிழுக்கு தரப்பட்டு வந்த முக்கியத்துவத்தைக் குறைத்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பாடத்திட்டம் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் தேர்வு எழுதுவோர் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அனைத்து வகை தேர்வுகளுக்கும் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
1. குரூப் 2 தேர்வை இரண்டாக பிரித்து நேர்முக தேர்வு மற்றும் நேர்முக தேர்வு இல்லாததது என பிரிக்கப்பட்டுள்ளது.
2. குரூப் 4ல் தமிழ் பாடத்திட்டம் 50 சதவிதம் குறைக்கப்பட்டுள்ளது.
3. குரூப் 2வில் தமிழ் நீக்கப்பட்டுள்ளது.
4. கிராம நி்ர்வாக அலுவலர் தேர்வில் தமிழ் நீக்கப்பட்டுள்ளது.
குரூப் 4ல் பொது அறிவு தேர்வுக்கு 150 வினாக்களும், தமிழ்பாடத்தில் 50 கேள்விகளும் வரும் என்று பாடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான கல்வி தகுதி 10ம் வகுப்பு என்பதால் தமிழ் வழியில் படித்தவர்கள் அதிகம் பேர் தேர்வு எழுதி வந்தனர். தற்போது அது 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் இனி தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உள்ளது.
தமிழக அரசு துறைகளில் பணி புரிய எழுத வேண்டிய தேர்வுகளிலேயே தமிழ் பாடத்தை குறைத்திருப்பது தேர்வு எழுதுவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த முறை குரூப் 4 தேர்வுக்கு 10 ஆயிரம் பணியிடத்திற்கு 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போட்டியிட்ட நிலையில் தேர்வு எழுதிய 50 சதவிதத்துக்கும் மேற்பட்டோர் 300 மதிப்பெண்களுக்கு 150க்கும் மேல் எடுத்திருந்தனர்.
இவர்கள் அனைவரும் தமிழ் வழியி்ல் படித்தவர்கள். அதுவும் தமிழ் பாடம் மூலமே பலர் அதிக அளவு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். இந்நிலையில் குரூப் 4ல் புதிய பாடத்திட்டத்தில் தமிழ்பாடத்தையே பாதியாக குறைத்திருப்பது தேர்வு எழுதுவோர் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இனி தமிழ் படித்தவர்கள் அரசு பணி கனவு தான் என புலம்ப துவங்கியுள்ளனர்.