சோளிங்கர்: தனி ஈழ பொதுவாக்கெடுப்பு கோரி ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்!
சோளிங்கர்: பொதுவாக்கெடுப்பு நடத்தி இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்தல், இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, கச்சத்தீவை திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்தினர்.
இலங்கைப் பிரச்சினையில் தமிழருக்கு ஆதரவான போராட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மாணவர்கள் ஆரம்பித்த இந்தப் போராட்டம் இப்போது மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. இப்போது இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களும் கைகோர்த்துள்ளனர்.
வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் என் ரவி தலைமையில் சோளிங்கர் நகரில் மார்ச் 19-ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் அதிமுக, திமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.
ரஜினி ரசிகர் மன்றத்தின் சோளிங்கர் ஒன்றிய பொறுப்பாளர் கோவன், மார்லின், பாண்டியன், நடராஜன், வெங்கடேசன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

அதிமுக தலைமை கழக பேச்சாளர் சோமு மணி, திமுக வேலூர் மாவட்ட துணைச் செயலர் அசோகன், வேலூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலர் ரத்தின சுகுமார், பாஜக மாவட்ட துணை சுந்தரம், பாமக வக்கீல் சக்கரவர்த்தி, கவுன்சிலர்கள் ஏழுமலை, சேகர் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தை வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சோளிங்கர் என் முருகன் செய்திருந்தார்.
சோளிங்கர் ரசிகர்களைத் தொடர்ந்து, சேலம், கோவை, திருச்சி, திருப்பூர் மாவட்ட ரசிகர்களும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications