நாராயணசாமி ஆபீஸ் மீது சரமாரி கல்வீச்சு.. பிரதமர், சோனியா கொடும்பாவிகள் எரிப்பு
புதுவை: தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 2 லட்சம் தமிழர்களை கொன்ற இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு துணை நிற்கும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி ஆகியோரின் உருவபொம்மையை எரிக்கும் போராட்டம் அண்ணாசிலை அருகே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக நகரமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை 10 மணியளவில் அண்ணா சிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் திரண்டு வந்தனர். போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி உருவபொம்மைகளையும், சோனியாகாந்தியை பேய் போல் சித்தரித்து வைத்திருந்த உருவ படத்தையும் எரித்தனர். மேலும் உருவபடங்களை அண்ணா சிலையை சுற்றி சுற்றி வந்து தீ வைத்தனர். இதனை போலீசார் சுற்றி சுற்றி வந்து தீயை அணைக்க முயன்றனர்.
மறுபக்கம் இன்னொரு பிரிவினர் கம்பன் கலை அரங்கில் உள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமியின் அலுவலகத்தை நோக்கி ஓடினார்கள். அங்கு அவர்கள் அலுவலகத்தை கல்வீசி தாக்கினார்கள். இந்த கல்வீச்சால் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார கண்ணாடிகள் உடைந்து போனது. மேலும் அலுவலக நுழைவு வாயிலில் நுழைந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை கீழே தள்ளி விட்டனர். இதனால் போராட்டகாரர்களை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள். எனினும் ஒரு வழியாக போராட்டக்காரர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறையில்ராஜபக்சே கொடும்பாவிஎரிப்பு
அதேபோல ஈழ விடுதலைக்கான மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக மயிலாடுதுறை தபால்நிலையத்தை பூட்டிப் போட்டு, ராஜபக்சே கொடும்பாவியை எரித்த எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர்..