வலுக்கும் மாணவர்கள் போராட்டம்… சென்னையில் தொடர் முழக்கம்… திருச்சியில் முற்றுகை
சென்னை: இலங்கை விவகாரத்தை முன்வைத்து நாளுக்கு நாள் தமிழகத்தில் வலுத்து வரும் மாணவர்கள் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் தொடர்முழக்கப் போராட்டம், திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் அலுவலகம் சூறை என பற்றி எரிகிறது மாணவர்கள் போராட்டம்
மாணவர்களுடன் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், இலங்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.
சென்னை மெரீனாவில் மாணவர்கள்
ஃபேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைத்தளங்களை பொழுது போக்காக மட்டுமே பயன்படுத்தி வந்த மாணவர் சமூதாயம் ஈழப்பிரச்சினையில் இதனை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு விடுதிகளை விட்டு வெளியேற்றப்பட்ட சூழ்நிலையிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் சென்னை மெரீனா கடற்கரையில் குவிந்து இலங்கை அரசுக்கு எதிராக தொடர் முழக்கமிட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சியினர் ஆதரவு
மாணவர்களின் போராட்டத்திற்கு திரு.பழ.நெடுமாறன், தா.பாண்டியன், சி.மகேந்திரன், அய்யா.த.வெள்ளையன், மதிமுகவின் மல்லை.சத்யா, பண்ருட்டி.வேல்முருகன், டாக்டர்.கிருஷ்ணசாமி, ஜவாகிருல்லா, இயக்குனர்.கௌதமன், இயக்குனர்.களஞ்சியம்,தோழர்.ஜோசெப் கென்னடி ,திருமலை(போர்க்குற்றம்-இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள்), திருமுருகன்(மே 17 இயக்கம்), தோழர்.வேலுமணி(தமிழர் எழுச்சி இயக்கம்), இராஜா ஸ்டாலின்(உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்),தோழர் .அருண் சௌரி (தமிழ்நாடு மக்கள் கட்சி), தோழர் .செந்தில்(சேவ் தமிழ் இயக்கம்),வழக்கறிஞர்.அமர்நாத்(தந்தை பெரியார் திராவிடர் கழகம்), தோழர்.தவசி குமரன்(திராவிடர் விடுதலை கழகம்),வழக்கறிஞர்.அங்கயற்கண்ணி ,தோழர் இசைமொழி (தமிழக பெண்கள் செயற்களம்) உள்ளிட்டோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் போராட்டம்
தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி மாணவர்களும் இணைந்து தொடர் முழக்கப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மாவட்ட தலைநகரங்களில் ஒருங்கிணைந்துள்ள மாணவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாகவோ, மத்திய அரசு அலுவலகம் முன்பாகவோ கூடி இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
தருமபுரியில் 6 வது நாள்
இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அரசு கலை மற்றும் சட்டகல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 10-ஆவது நாளாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். தருமபுரி அரசு கலைக்கல்லூரி விடுதி மாணவர்கள் இன்று 6 ஆவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர்.
திருச்சியில் முற்றுகை
திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் இன்று 9ஆவது நாளை எட்டியுள்ளது. அனைத்து கல்லூரி மாணவர்களும் பேரணியாக கிளம்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் முழக்கமிட்டனர்.
நெல்லையில் போராட்டம்
நெல்லையில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் மாணவர்களின் போராட்டம் 9 ஆவது நாளை எட்டியுள்ளது. மாணவர்கள் உண்ணாவிரதம் மட்டுமின்றி, பல்வேறு வகையான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக் கோரி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி மாணவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கையில் அடையாள உண்ணாவிரதம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அரசு மற்றும் தனியார் கலைக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தனியார் பொறியில் கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடரும் போராட்டம்
நாகர்கோயில் மாவட்டத்தில் பொறியியல் மாணவர்கள், தொழிற் பயிற்சி பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இலங்கைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களும் பங்கேற்பு
மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், இலங்கைக்கு எதிராகவும் பொதுமக்கள், வழக்கறிஞர்கள், வணிகர்கள் என சகல தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் இன்று போராட்டம் நடத்துகின்றனர். இதேபோல தமிழ் அமைப்புகள் சார்பில் ரயில் மறியல் போராட்டமும் இன்று நடைபெறுகிறது.
புதுச்சேரியில் வகுப்பு புறக்கணிப்பு
புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 50 பேர் இன்று 3 ஆவது நாளாக தங்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர். புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் 2750 மாணவிகள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்தனர். இவர்கள் இலங்கை அரசுக்கும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
நாராயணசாமி அலுவலகம் சூறை
இலங்கை அரசுக்கு எதிராக போராடி வரும் மாணவர்கள் இன்று புதுச்சேரியில் பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு சூறையாடினார். அப்போது அங்கு வந்த போலீசார் 200க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்தனர்.