சிங்கள தொழில் அதிபரை தூத்துக்குடியில் இருந்து திருப்பி அனுப்பிய போலீசார்
தூத்துக்குடி: இலங்கையில் இருந்து தமிழகம் வந்த புத்த பிச்சுகள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து தூத்துக்குடியில் தங்கியிருந்த சிங்கள தொழில் அதிபரை போலீசார் பாதுகாப்பாக திருப்பி அனுப்பினர்.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வரும் சிங்களர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் இலங்கையில் இருந்து தமிழகம் வந்த புத்த பிச்சுகள் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 5 சிங்கள மீனவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடியில் இருந்து ராமநாதபுரம் கொண்டு சென்றனர். அங்குள்ள நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் சிங்கள தொழில் அதிபரான லாலாசி நானாதி ரனதுங்கே என்பவர் தங்கியிருந்தார். மாலத்தீவு மற்றும் இலங்கையில் 1கே20 என்ற பெயரில் உப்பு மார்க்கெட்டிங் கம்பெனி வைத்துள்ள அவர் கடந்த 18ம் தேதி தூத்துக்குடி வந்துள்ளார். அங்கு தொழில் நிமித்தமாக லோகேஷ் என்பவரை சந்தித்து விட்டு நாளை இலங்கை திரும்ப இருந்தார்.
இந்நிலையில் போலீசார் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அவரிடம் நிலைமையை எடுத்துக் கூறி முன்னெச்சரிக்கையாக அவரை மதுரை வரை காரிலும், பின்னர் அங்கிருந்து விமானம் மூலமும் இலங்கைக்கு பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்தனர்.