இலங்கைக்கு எதிராக போராடும் தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக யுஎஸ்-ல் போராட்டம்
சான்பிரான்சிஸ்கோ: இலங்கை அரசுக்கு எதிராக போராடிவரும் தமிழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் முன் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
மார்ச் 19 ஆம் நாள் காலை 9:00 மணியளவில் இந்தியத் துணைத்தூதரகத்தின் முன்பாக குவிந்த தமிழர்கள், தமிழக மாணவர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் முழக்க மிட்டனர்.
சமூக வலைதளங்கள் மூலம்தான் இந்த போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் தமிழர்கள் பலர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். வேலைநாள் என்றும் பாராமல் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்து ஏராளமான தமிழர்கள், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
" தமிழ் நாட்டு மாணவர் போராட்டத்தை ஆதரிக்கிறோம் ", " இந்தியாவே ! மனித உரிமையை ஆதரி, தமிழர்களைக் காப்பாற்று " , இந்தியாவே ! அமெரிக்கத் தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யாதே என்று பலவாறு முழக்கமிட்டனர்.
மேலும் "We support TN Students", "INDIA - Support Human Rights, INDIA - Save the Tamils, INDIA - Don't Dilute US Resolutions" போன்ற முழக்கங்கள் தூதரக அதிகாரிகளின் காதில்விழும் அளவிற்கு உரத்த குரலில் முழக்கமிட்டனர்.
"தமிழக மாணவர்கள் வெல்வார்கள் ! அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள் !! உறுதியாக வெல்வோம், நாளை தமிழீழம் காண்போம் !!!" என்று போராட்டக்குழுவினர் உறுதியாக நம்பிக்கை தெரிவித்தனர்.
இறுதியாக துணைத் தூதர் ஒருவரைச் சந்தித்த போராட்டக் குழுவினர் உலகத் தமிழ் அமைப்பின் சார்பில் கடிதமொன்றை அளித்தார்கள். அவரும் அக்கடிதத்தை இந்தியாவிற்கும் மற்ற தூதரகங்களுக்கும் அனுப்பிவைப்பதாக உறுதியளித்தார். மேலும் அதே கடித்தத்தை நியூ யார்க் நகரில் உள்ள தூதரகத்திற்கும் ஃபேக்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.
அமெரிக்க காவல்துறையினரின் ஒத்துழைப்புடனும், பாதுகாப்புடனும் இந்தப் போராட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.அடுத்தடுத்தப் போராட்டங்கள் இதைவிட மிகவும் வலிமையாக நடத்தமுடியும் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தமிழ்நாடு மட்டுமல்லாது உலகத் தமிழர்களிடையேயும் ஆதரவு அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications