ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றது செல்லும்: ஹைகோர்ட் தீர்ப்பு
தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமானவிஜயகாந்த், கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு மூர்த்தி என்பவரின் மனைவி ஜெயந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
தேர்தல் விதிகளை மீறி தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்றும் விஜயகாந்த் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பை நீதிபதி கே.வெங்கட்ராமன், தள்ளி வைத்திருந்தார்.
இன்று பிற்பகலில் நீதிபதி அளித்த தீர்ப்பில், ‘‘தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை சரிதான். விஜயகாந்த் வெற்றி செல்லும்" என்று அறிவித்தார். இந்த தீர்ப்பின் மூலம் தேமுதிகவினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
இதேபோல், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ அழகுவேலு வெற்றியை எதிர்த்து அத்தொகுதியை சேர்ந்த வாக்காளர் சின்னத்துரை தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.