இலங்கை பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி சென்னை மெரீனாவில் பிரச்சாரம்
சென்னை: தமிழகத்தில் இலங்கை பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கை. ஆனால் மத்திய அரசோ இதை கொள்ளவில்லை. இதற்கு எதிராக இலங்கையுடனான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இலங்கைப் பொருட்களை பயன்படுத்துவதை கைவிட வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள தமிழர் பண்பாட்டு நடுவம் முயற்சிகளை மேற்கொண்டது. தமிழகத்தில் பல கடைகளில் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிஸ்கட், பழங்கங்கள், இறைச்சி, பருத்டி ஆயத்த ஆடைகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.
வரிச்சலுகை
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு வரிச் சலுகை அளித்திருக்கிறது. இதனால் தமிழக சந்தைக்கு வரும் பொருட்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரம் பலப்படுகிறது.
ஆயுதக் குவிப்பு
இந்திய அரசின் வரிச்சலுகைகள் மூலம் பொருளாதார பலம் பெறுகிற இலங்கை ஆயுதங்களை வாங்கிக் குவித்து தமிழர்களை படுகொலை செய்கிறது. மேலும் தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் நிரந்தர முகாமிட்டு தமிழர்களுக்கு கொடும் துன்பம் இழைக்கிறது. இந்த நிலையில் இலங்கையின் ஏற்றுமதி பெருகுவது தமிழருக்கு நன்மையானது அல்ல.
பொருளாதாரத் தடை
இலங்கையின் ஏற்றுமதி சந்தையை முடக்குவது தான் இலங்கையின் மீதான தமிழக அரசின் பொருளாதாரத் தடையை மேலும் வலுப்படுத்தும். இதற்காகவே இலங்கையின் உற்பத்தி பொருட்களை தமிழக தமிழர்கள் யாரும் வாங்க வேண்டாம் என்று தமிழர் பண்பாட்டு நடுவம் பிரச்ச்சாரத்தில் ஈடுபட்டது.
எப்படி பிரச்சாரம்?
இலங்கையில் இருந்து தயாரித்து வரும் சில திண்பண்டங்களை எடுத்துக் கொண்டு போய் மக்களிடம் காட்டி அதை அவர்கள் வாங்கக் கூடாது என்று பிரச்சாரம் செய்தது தமிழர் பண்பாட்டு நடுவம். இலங்கை தயாரிப்பு என்ற எந்த பொருட்களில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றை தமிழர்கள் வாங்கக் கூடாது என்றும் பிரச்சாரம் செய்திருக்கின்றனர்.
பிற மாநில மக்களும்..
இந்தியாவில் இருந்து வந்த பிற மாநிலத்தவரும் கூட இலங்கை சேவைகள் மற்றும் பொருட்களை புறக்கணிப்போம் என்று ஒரு படிவத்தில் கையெழுத்து கையெழுத்திட்டு உறுதி அளித்திருக்கின்றனர். இது தொடர்பான துண்டறிக்கைகளும் விநியோகம் செய்யப்பட்டன.