கோவை தொழிற்சாலையில் கூலி வேலை பார்த்த மேற்கு வங்க மாவோயிஸ்ட் கமாண்டர் கைது!
கோவை: மேற்கு வங்க மாநிலத்தில் 24 போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான மாவோயிஸ்ட் காமண்டர், கோவை போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், மேற்கு மிட்னாபூர் மாவட்டம், ஜார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம்சரண், 26. மாவோயிஸ்ட் இயக்கத்தின், "ஆயுதப்படையில்' இரண்டாம் நிலை கமாண்டராக பதவி வகித்தவர். கடந்த, 2010ம் ஆண்டில், துணை நிலை ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி, பலத்த உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை, மேற்கு வங்க போலீசார் தேடி வந்தனர்.
மூன்றாண்டுகளாக, தலைமறைவாக இருந்த ஷியாம் சரண், கோவை நகரில் பதுங்கியிருப்பதை, மேற்கு வங்க உளவுத்துறையினர், தகவல் தொடர்பு தொழில்நுட்ப யுத்திகள் மூலம் கண்டுபிடித்து, கோவை போலீசுக்கு தெரிவித்தனர். மாநகர போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், பீளமேட்டில் தங்கி, தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில், கூலிவேலை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்நபரை, பீளமேடு போலீசார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். இத்தகவல், மிட்னாபூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, டி.எஸ்.பி., விவேக்குமார் வர்மா தலையிலான போலீசார் நேற்று கோவை வந்தனர்; அவர்களிடம் ஷியாம் சரண் ஒப்படைக்கப்பட்டார். இவர் பயங்கரவாதி என்பதால், இடுப்பில் கயிறும், கையில் விலங்கும் பூட்டி, மேற்கு வங்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
மாவோயிஸ்ட் ஆனது எப்படி?
ஜார் கிராமத்தைச் சேர்ந்த ஷியாம்சரண், பள்ளிப்படிப்பைக்கூட தாண்டாதவர். இவரது கிராமத்தைச் சேர்ந்த சக நண்பர்கள், மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்ததை கண்டு, இவரும் சேர்ந்து, ஆயுதப்பயிற்சி பெற்றார். தாக்குதல் நடவடிக்கைகளிலும், சக குழுவினருடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளார். 2007ல், மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்த ஷ்யாம் படிப்படியாக நிலை உயர்ந்து, "ஆர்ம்ஸ் குவார்ட்ரன் லீடர்' பொறுப்பு வகித்தான்.
சில்டா பகுதி துணைநிலை ராணுவ முகாம் மீது மாவோயிஸ்ட்கள் நடத்திய பெரும் தாக்குதலுக்குப் பிறகே, ஷியாம்சரண் பற்றிய தகவல்கள், மேற்குவங்க உளவுத்துறைக்கு கிடைத்தன.
கோவையில் பதுங்கிய ஷியாம்
ஷியாம் சரணைப் பிடிக்க, சொந்த ஊரான, ஜார் கிராமத்துக்குச் சென்று ரகசிய விசாரணை நடத்திபோது முன்புபோல அவர் அடிக்கடி கிராமத்துக்கு வருவதில்லை என்று தெரியவந்தது. அவர் வெளிமாநிலத்துக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்த போதலீசுக்கு ஷியாமின் அண்ணன் கோவையில் வேலை பார்ப்பது தெரியவந்தது. அவரது மொபைல்போன் எண்களை சேகரித்த போலீசார், தொடர்பிலிருந்த பலரது, மொபைல்போன் எண்களையும் ஆராய்ந்தனர். அப்போதுதான், ஷியாம்சரண் கோவையில் இருப்பதும், அடிக்கடி போனில் பேசியதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து பீளமேடு, தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள "நித்யா இன்டஸ்ட்ரீஸ்' என்ற கம்பெனியில் ஷியாம்சரண், தங்கி, பணியாற்றுவது உறுதியானது.
தமிழ் தெரிந்த அதிகாரிகள்
ஷியாம்சரணை கைது செய்ய, மேற்குவங்க டி.எஸ்.பி., விவேக்குமார்வர்மா என்பவரது தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. இவர் போலீஸ் பணிக்கு வரும் முன்னர் திருப்பூர் மாவட்டம், அவிநாசியிலுள்ள வங்கியில் பணிபுரிந்த அனுபவம் உள்ளது. தமிழ் பேசத் தெரியும் என்பதால் அவர் தலைமையில் வந்த தனிப்படை போலீசார் சனிக்கிழமையன்று கோவை வந்தனர்.
கம்பெனியில் சுற்றிவளைப்பு
நேற்று முன்தினம் பீளமேடு, தண்ணீர் பந்தல் பகுதியிலுள்ள "நித்யா இண்டஸ்ட்ரீஸ்' கம்பெனியை சுற்றிவளைத்த போலீஸ் படையினர், அங்கு பதுங்கியிருந்த ஷியாம்சரணை கைது செய்தனர். அவருடன் தங்கியிருந்த மேற்குவங்கம், ஜார்கன்ட், பீகார் மாநில இளைஞர்களையும் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர்.
சில்டா துணைநிலை ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், ஜெயந்தோ என்பவர் முக்கிய குற்றவாளி. இவர்தான், மேற்கு வங்கத்தில், மாநில அளவில் மாவோயிஸ்ட்களை ஒருங்கிணைத்து, தாக்குதல் யுத்திகளை செயல்படுத்துபவர்; இவர், இன்னும் பிடிபடவில்லை.
இந்த வழக்கில் இருவர் "என்கவுன்டரில்' கொல்லப்பட்டுவிட்டனர். மற்றொருவர், ஆயுதத்துடன் சரணடைந்தார். தற்போது, ஷியாம்சரண் பிடிபட்டுள்ளார்.
கோவையில் தேடுதல் வேட்டை
மேற்கு வங்கத்தில் இருந்து, போலீஸ் நெருக்கடிக்கு பயந்து, ஷியாம் சரணுடன், மேலும் பல மாவோயிஸ்ட்கள், கோவைக்கு தப்பி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.
ஆனால் ஷியாம் சரணிடம் நடத்திய விசாரணையில்,"மாவோயிஸ்ட்கள் யாரும் என்னுடன் வரவில்லை; என் சொந்த கிராமத்தினர் சிலருடன்தான் கோவை வந்தேன் எனக் கூறியுள்ளார். எனினும் அதனை நம்பாத போலீசார் ஷியாம் சரணுடன் வந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள் சிக்கினால் மட்டுமே அவர்கள் கிராமத்தினர்தானா அல்லது அவர்களும் மாவோயிஸ்ட்கள்தானா என்பது தெரியவரும்.
கோவையில் கூலித் தொழிலாளியாக வேலைபார்த்த ஒருவர் மாவேயிஸ்ட் கமாண்டர் என்பதும், அவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.