சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: ஜெயலலிதா ரூ.29 கோடி நிதி
சென்னை: சென்னையில் வரும் நவம்பர் மாதம் நடக்கும் உலக செஸ் சாம்பியன் போட்டிக்காக முதல்வர் ஜெயலலிதா ரூ.29 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
இது குறித்து சட்டசபையில் விதி 110-ன் கீன் ஜெயலலிதா படித்தளித்த அறிக்கை வருமாறு,
கடந்த 2011ம் ஆண்டு உலக செஸ் கூட்டமைப்பின் தலைவரான கிர்ஸன், என்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து 2012ம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன் போட்டியை சென்னையில் நடத்துமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து இதுவரை இந்தியாவில் நடைபெறாத இந்த செஸ் போட்டியினை ரூ.20 கோடி செலவில் நடத்த ஒப்புதல் அளித்தேன்.
ஆனாலும், இந்தப் போட்டியை நடத்துவதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் அதிகத் தொகையை ரஷியா குறிப்பிட்டதால் கடந்த ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன் போட்டி ரஷியாவில் நடைபெற்றது.
கடந்த ஆண்டுக்கான போட்டியை நடத்த தமிழகம் முன்வந்ததைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நவம்பர் 6 முதல் 26ம் தேதி வரை நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன் போட்டியினை ஏல முறையின்றி சென்னையில் நடத்த உலக செஸ் சாம்பியன் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த வேண்டுகோளை ஏற்று வரும் நவம்பரில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன் போட்டியை சென்னையில் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தப் போட்டிகள் ஐந்து முறை செஸ் சாம்பியனான தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இப்போதைய உலகத் தர வரிசையில் முதல் சதுரங்க வீரராகவும், தர வரிசைப் பட்டியலில் இதுவரை உயர்ந்த அளவில் 2 ஆயிரத்து 872 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ள நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் ஆகியோருக்கும் இடையே நடைபெறும்.
சர்வதேச அளவிலான இதுபோன்ற போட்டிகள் சென்னையில் நடத்தப்படுவதன் மூலம் இளைய சமுதாயத்தினர் இடையே செஸ் விளையாட்டினை பயில்வதற்கான ஆர்வம் மேலும் அதிகரிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.