பாஜகவில் சித்து ஓரம் கட்டப்படுகிறார் ... விரைவில் கட்சிக்கு முழுக்கு, தேர்தலிலும் போட்டியிட மாட்டார்
அமிர்தசரஸ் லோக்சபா தொகுதி உறுப்பினரான சித்து, 2014 லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று அவரது மனைவியும், சித்துவின் தொகுதி செயலாளருமான நவ்ஜோத் கெளர் சித்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கணவர் குறித்து தவறாக செய்திகள் வருகின்றன. அவர் அமிர்தசரஸை விட்டு ஓடி விட்டார் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.தனது தொகுதியை அவர் கவனிப்பதில்லை, மக்கள் குறைகளைக் கேட்பதில்லை என்றெல்லாம் கூட செய்திகள் வருகின்றன. ஆனால் அது உண்மை இல்லை.
உண்மையில் கட்சிதான் அவரை ஒதுக்கி வைத்துள்ளது. அதன் பிறகே அவர் டிவி நிகழ்ச்சிகளிலும் பிற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள ஆரம்பித்தார். இன்றைய நிலவரப்படி 2014 லோக்சபா தேர்தலில் சித்து போட்டியிட மாட்டார் என்றார் கெளர்.
மேலும் அவர் கூறுகையில், அமிர்தசரஸ் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்சி நிர்வாகிகள் தேர்வில் சித்துவின் கருத்து கேட்கப்படுவதில்லை. வேறு எந்த விவகாரத்திலும் கூட அவரை கட்சி கண்டு கொள்வதில்லை. எனவே அமைதியாக ஒதுங்கி விடும் மன நிலைக்கு சித்து வந்து விட்டார். இதனால்தான் வேறு வேலைகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார் என்றார் அவர்.
தனது கணவரை எப்படியெல்லாம் பாஜக ஒதுக்கி வைத்து அவமானப்படுத்தி வருகிறது என்பதையும் பேஸ்புக்கில் மிகவும் விரிவாக எழுதியுள்ளார் கெளர்.