மதுரையில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்… பீதியில் மக்கள்
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மேலுர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் பரவியதில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களின் தீவிர நடவடிக்கையை அடுத்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் மர்மகாய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலுர் அருகே உள்ள நரசிங்கம்பட்டி, கொட்டகுடி, பெருமாள்பட்டி, மலம்பட்டி ஆகிய பகுதி மக்களும் காய்ச்சலால், பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் திருவாதவூரை அடுத்துள்ளது சுண்ணாம்பூர் கிராமத்தில் கடந்த வாரம் கிராம மக்களிடையே மர்ம காய்ச்சல் பரவியது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அனைவரும் அருகில் உள்ள திருவாதவூர் மற்றும் பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றனர். இதனையடுத்து அதிகாரிகள் முகாமிட்டு சோதனை நடத்தியதில் 15 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தன.
இதையடுத்து டெங்கு சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருப்பதால் அங்கேயே அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. இருப்பினும் சில அபூர்வ வகை ரத்தங்கள் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் இல்லை என்பதால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications