அரக்கோணம் அருகே ரயில் தடம் புரண்டதற்கு சதி வேலையே காரணம்?
அரக்கோணம்: அரக்கோணம் அருகே சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் யஷ்வந்த்புரா சென்ற ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதற்கு சதி வேலையே காரணமாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் இருந்து யஸ்வந்த்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 2 நாட்களுக்கு முன்பு காலை 5.40 மணிக்கு அரக்கோணம் அருகே சித்தேரியில் தடம் புரண்டது. மொத்தம் 13 பெட்டிகள் தடம் புரண்டதில் ஒருவர் பலியானார். பலர் காயம் அடைந்தனர். ரயில் தடம் புரண்டதில் ஏசி பெட்டிகளுக்குதான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ரயில் தடம் புரண்டது குறித்து பல்வேறு சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளன. சென்னையிலிருந்து 77 கிலோ மீட்டரில் விபத்து நடந்துள்ளது. அதிலும் 76வது கிலோ மீட்டரில் 33வது கம்பத்தில் இருந்து 37வது கம்பம் வரை தண்டவாளத்தையே காணவில்லை. தண்டவாளங்கள், ஸ்லீப்பர் கட்டைகள் தூள் தூளாகி ரயில் பாதை இருந்த அடையாளமே இல்லை. அந்த இடத்தில் தடம் புரண்ட ரயில் பெட்டிகளின் சக்கரங்கள் சிதறி கிடந்தன.
வெறுமனே தடம் புரண்டால் இதுபோன்று நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இந்த பாதையில் கடந்த 7ஆண்டுகளில் நடைபெறும் 11வது விபத்து இது. அதிலும் 2011ம் ஆண்டு நடந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இப்படி தொடரும் விபத்துகளுக்கு ரயில் பாதை பராமரிப்பு இல்லாதுதான் காரணம் என்பதை ரயில்வே அதிகாரிகளே ஒப்புக் கொள்கின்றனர்.
முன்பெல்லாம் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்கு ரயில் பாதை ஒரம் இருக்கும் கிராமத்தினரை வேலைக்கு எடுப்பார்கள். அவர்கள் அடிக்கடி பராமரிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அந்த நிலை இப்போது இல்லாததும் விபத்துகள் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது. அதிலும் விபத்து நடந்த இடத்திற்கு பக்கத்தில் உள்ள பாதையில் பல இடங்களில் ஸ்லீப்பர் கட்டைகள் சேதமடைந்துள்ளன. தண்டவாளத்தை இறுக்கிப்பிடிக்கும் கிளிப்களும் கழன்று கிடந்ததை பார்க்க முடிந்தது.
கடந்த ஜனவரி 8ம் தேதி இரவு சூலூர்பேட்டையில் இருந்து சென்னை வந்த மின்சார ரயில், பொன்னேரியில் நின்று புறப்பட்ட போது முதல் வகுப்பு பெட்டியின் இருக்கைகள் மர்மமான முறையில் எரிக்கப்பட்டன. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மறுநாள் அந்த ரயிலில் முதல்வகுப்பு பெட்டிக்கு வெளியே நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.
அதில், டெல்லியில் நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்களுக்காக தமிழகத்தில் போராடுகிறீர்கள். ஆனால் தமிழகத்தில் பழங்குடி பெண்கள் கற்பழிப்பதை யாரும் எதிர்ப்பதில்லை. ஏன் இந்த பாகுபாடு எல்லோரும் இந்தியர்களாக ஒற்றுமையாக இதுபோன்ற சம்பவங்களை எதிர்ப்போம். இல்லாவிட்டால் இதுபோன்ற சேதங்கள் தொடரும். அடுத்த சேதம் அரக்கோணம் மார்க்கத்தில்.....இதயநேசன் (அன்பை தவிர வேறொன்றுமில்லை) என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த நோட்டீஸ்தான் தற்போது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. எனவே அரக்கோணம் ரயில் தடம்புரண்ட விபத்து சதி வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து முழு அளவிலான விசாரணைக்கு ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.