தென்காசியில் நோயாளிகளுக்கு தவறான கண் சிகிச்சை: 7 பேர் பார்வை பறிபோனது
நெல்லை: தென்காசி அரசு மருத்துவமனையில் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை காரணமாக 7 பேரின் பார்வை பறி போனது.
நெல்லை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தின் சார்பில் சேர்ந்தமரம் ஆரம்ப சுகாதார மையத்தில் கடந்த 10ஆம் தேதி கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களில் 13 பேருக்கு கண்ணில் குறைபாடு இருப்பதை கண்டுபிடித்த மருத்துவர்கள் கண் அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்தனர்.
அதன்படி முதல் குழுவில் ஆறு பேருக்கு கடந்த 10ஆம் தேதியே தென்காசி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
எஞ்சிய ஏழு பேருக்கு மறுநாள் அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், சிகிச்சையில் ஏதோ கோளாறு ஏற்பட்டதால் இரண்டாம் கட்டமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு பார்வை குறைந்து கொண்டே வந்து முற்றிலும் பார்வை பறிபோனது.
பதறிப்போன மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அவர்களை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கும் போதிய வசதி இல்லாததால் நெல்லையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆபரேஷனுக்கு பிறகு கண்ணில் நோய் தொற்று ஏற்பட்டதே பார்வை இழப்பிற்கு காரணம் என்று அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். அதனை சரி செய்ய தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், ஓரிரு வாரத்துக்கு பின்னரே அவர்களுக்கு பார்வை திரும்ப கிடைக்குமா? என்பதை சொல்ல முடியும்' எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் பார்வை பறிபோன சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.