சிகிச்சை பலன் அளிக்காவிட்டால் டாக்டர்கள் பொறுப்பல்ல: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: நோயாளியின் உடல் ஒத்துழைப்பு தர மறுத்து, சிகிச்சை பலன் அளிக்காவிட்டால் டாக்டர்கள் பொறுப்பு அல்ல என டெல்லி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
டெல்லியைச்சேர்ந்த அட்டார் முகமது என்பவர் காசநோய் காரணமாக கவலைக்கிடமான நிலையில், கடந்த 2002-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதி டெல்லியில் அரசு ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். 3 நாட்கள் கழித்து அவர் மரணம் அடைந்தார். டாக்டர்களின் அலட்சியத்தால், அவர் இறந்து விட்டதாக அவருடைய குடும்பத்தினர் டெல்லி கோர்ட்டு ஒன்றில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், டாக்டர்கள் மீது தவறு இல்லை என்று கூறி, அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதை எதிர்த்து, டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் குடும்பத்தினர் அப்பீல் செய்தனர். அம்மனுவை நீதிபதி காமினி லவு தள்ளுபடி செய்தார். தனது தீர்ப்பில், ‘அதிக அபாயம் நிறைந்த சிகிச்சை முறைக்கு ஒரு டாக்டா அழைக்கப்படுகிறார். அவர் சிகிச்சை அளிக்க நோயாளியின் குடும்பத்தினரும் அனுமதிக்கின்றனர். அந்நிலையில், சிகிச்சையை நோயாளியின் உடல்நிலை ஏற்காவிட்டால், அதற்கு டாக்டர்கள் பொறுப்பு அல்ல. இத்தகைய வழக்குகளில் இருந்து டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார்.