புனே ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு- தீவிரவாதி ஹிமாயத் குற்றவாளி - கோர்ட் தீர்ப்பு!
2010ஆம் ஆண்டு புனே நகரில் வெளிநாட்டவர் அதிகம் கூடும் ஜெர்மன் பேக்கரியில் இரவு 7 மணிக்கு பயங்கர குண்டு வெடித்தது. இதில் 17 பேர் பலியாகினர். 64 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் ஹிமாயத் பெய்க் என்பவன் மட்டுமே சிக்கினான். மேலும் 5 பேர் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ளனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் புனே ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி அபுஜிண்டால்தான் கொழும்பு புறநகர் பகுதியில் ஹிமாயத்துக்கு பயிற்சி கொடுத்திருக்கிறான். இது தொடர்பான தகவல்களை சிறப்பு போலீஸ் படையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த போலீசார் 2500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 103 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணை மார்ச் மாதம் முடிவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று ஹிமாயத்தை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ஹிமாயத்துக்கு என்ன தண்டனை என்பது வரும் 18-ந் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.