நில மோசடி- போலி ஆவணம் மூலம் ஜாமீன்- சிக்கினார் தேமுதிக எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியன்!
திருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான நிலத்தை திருத்தணி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியன் அபகரித்தார் என்பது புகார். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட நில அபகரிப்பு பிரிவில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பார்த்தசாரதி புகார் செய்தார். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. அருண் சுப்ரமணியன் 18.7.2012 அன்று கைது செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதன் பின்னர் திருவள்ளூர் மாவட்ட நில அபகரிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு வைத்திய லிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், போலி ஆவணங்கள் தாக்கல் செய்து எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியம் ஜாமீன் பெற்றுள்ளார். அதனால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியம் ஜாமீனை கடந்த 8-ந் தேதி ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனால் மீண்டும் சிறைக்குப் போக வேண்டும் என்பதால் எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியன் தலைமறைவானார். அவரது வீடு உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அவரைப் பிடிக்க தனிப்படை போலீசாரும் அமைக்கப்பட்டனர் இந்நிலையில் ஆந்திர மாநிலம் மந்த்ராலயாவில் பதுங்கி இருந்த அருண்சுப்பிரமணியனை இன்று போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.