ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு.... 31 பேர் பலி
பாக்தாத்: ஈராக்கில் தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதல் சம்பவத்தில் 31 பேர் பலியாகினர்.
ஈராக்கில் வரும் 20-ம் தேதி மாகாணத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பாக்தாத் உள்ளிட்ட 18 இடங்களில் இன்று காலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
சதாம் உசேனை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக போரிட்ட அமெரிக்கப்படை 2011-ம் ஆண்டு ஈராக்கிலிருந்து வெளியேறியது. அதன்பிறகு அமைந்த ஷியா முஸ்லிம்கள் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக அல்கொய்தாவுடன் தொடர்புடைய சன்னி முஸ்லிம்களின் தீவிரவாத இயக்கத்தினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அடுத்தடுத்து குண்டு வெடிப்பு
தலைநகர் பாக்தாத்தில் பரபரப்பான காலை நேரத்தில் சோதனைச்சாவடி அருகே இரு கார் குண்டுகள் வெடித்தன. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல் துஸ் குர்மாத் நகரின் சாலையில் மூன்று இடங்களில் அடுத்தடுத்து கார்குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வடக்குப்பகுதியின் கிர்குக் நகரில் இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 9 பேர் கொல்லப்பட்டனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
ஈராக்கின் மொத்தம் 18 இடங்களில் இன்று துப்பாக்கிகள், குண்டுகள் கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பிற்பகல் நிலவரப்படி மொத்தம் 31 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.