சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதியில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்
சான்பிராசிஸ்கோ: அமெரிக்காவின் சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதியில் குடா பகுதி தமிழ்மன்றம் சார்பில் சித்திரை திருவிழா சான்டா கிளாரா பகுதியில் நேற்று முன் தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவுக்கு தலைமை விருந்தினராக சான்பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் கவுன்சிலர் ஜெனரல் திரு பார்த்தசாரதி தலைமை வகித்தார்.இத்திருவிழாவுக்கு சிலிக்கன்வாலி தமிழ் மக்கள் மிக ஆர்வமுடன் பங்கெடுத்து கலந்து கொள்ளவும், கண்டு களிக்கவும் வந்திருந்ததால் அரங்கு நிறைந்து காணப் பட்டது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிக ஆர்வமுடனும், சிறப்பாகவும் தமிழில் இசை , பாடல் மற்றும் நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். தமிழக பாரம்பரிய நடனங்கள், பரதநாட்டியம், பழைய மற்றும் புதிய திரைபட பாடல் நடனங்கள் மற்றும் பாடல்கள், இசை நிகழ்ச்சிகள் என்று அனைத்து வகையான நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தது சிறப்பாக இருந்தது.தமிழில் வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக நடத்தினர்.
தலைமை விருந்தினர் இது போன்ற வெளிநாட்டில் இதுபோன்ற கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதை குறித்துப் பாராட்டி பேசினார். மேலும், ‘ தமிழர்களின் அடையாளமாக இருப்பது கடின உழைப்பு, அறிவு திறன் மற்றும் அவர்கள் வாழும் சமுதாயத்தில் அமைதியாகவும், சிறந்த குடிமகனாக இருப்பத்தும் தான்' என்று கூறினார்.
தமிழ் சங்க நிர்வாகிகள் தமிழ் சங்கம் செய்து வரும் ரத்த தான முகாம், ஏழைகளுக்கு உணவளிக்கும் முகாம், கல்வி முகாம், சுகாதார முகாம் போன்ற சமூக பணி பற்றியும் தமிழ் மொழி மற்றும் கலாசாரம் சார்ந்த பணிகள் பற்றியும் விளக்கினர். சிலிக்கன்வாலி வாழ் தமிழர்கள் பெருந்திரளாக தமிழ் மன்றத்துடன் தங்களை இணைத்து கொண்டு அதன் பல்வேறு பணிகளை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்தி பலரும் பயனடைய உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமிழில் தங்களது குழந்தைகளுடன் வீட்டில் பேசாவிட்டால் தமிழ் பிற்காலத்தில் அழிந்து விடும் என்ற கதை கருவுடன் 'தமிழ் இனி' என்ற குறும்படம் மூலம் பல்லாயிரகணக்கான புலம் பெயர் தமிழர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்திய பட குழுவினருக்கு பாராட்டும் நினைவு பரிசும் அளிக்க பட்டது.
சித்திரை திருவிழாவில் கலந்து கொண்ட இளம் சிறார்களின் தமிழ் உச்சரிப்பையும், தமிழர் கலைகளின் மீது உள்ள ஆர்வத்தையும் , தமிழ் மன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதில் இருந்த ஈடுபாட்டையும் பார்க்கும் போது வெளி நாடுகளில் என்றென்றும் இளமையுடன் தமிழ் எழிலுடன் வாழும் என்ற நம்பிக்கை அனைவரின் மனதிலும் ஏற்பட்டது.
தமிழ் புத்தாண்டு விழாவின் தொடர்ச்சியாக மே மாதம் 4ம் தேதி பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றம் வாழ்க்கையில் வெற்றிபெறப் பெரிதும் தேவை - தடைகளைத் தாண்டும் தைரியமே! நெளிவு சுளிவு கண்டு நீந்தும் நிதானமே! என்ற தலைப்பில் பிரிமாண்ட் நகரில் நடை பெற உள்ளது.
(தகவல்- சதுக்கபூதம்)