சாலை விபத்தில் சிக்கிய உயிர்கள்... உதவியின்றி உயிரிழந்த பரிதாபம்...
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் நகரில் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தாய் மற்றும் குழந்தையை மீட்க யாரும் உதவாத காரணத்தால் கணவரின் கண்ணெதிரே இருவரும் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் நகரில் இரு சக்கர வாகனத்தில் குடும்பத்தினருடன் சென்ற ரெய்கர், சுரங்க சாலையில் சென்று கொண்டிருந்த போது சரக்கு வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் அவரது மனைவி குட்டி மற்றும் 6 மாத குழந்தை ஆருஷி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். ரெய்கரும், அவரது மகன் தனிஷும் லேசான காயத்துடன் தப்பினர்.
இதனையடுத்து, தனது செல்போன் மூலம் உறவினர்களையும், போலீசாரையும் தொடர்பு கொள்ள முயன்றார் ரெய்கர், சிக்னல் கிடைக்கததால், அங்கு சென்ற வாகனங்களை நிறுத்தி உதவி கேட்டார்.
விபத்தில் சிக்கிய ரெய்கர் மனைவியின் உடல், சரக்கு வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டதால், சில மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் வீசப்பட்டது. இதில் பலத்த காயம் ஏற்பட்டது. மனைவியையும், குழந்தையையும் காப்பாற்ற கோரி போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலையில், ரெய்கரும், சிறுவன் தனிஷும் கூச்சலிட்டனர். ஆனாலும் வாகனத்தை நிறுத்தி உதவ யாரும் முன்வரவில்லை என்பது தான் மனதை உலுக்கியுள்ளது. விபத்திற்கு காரணமான சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் தப்பிச் சென்று விட்டார். எனினும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாலையில் உயிருக்குக் போராடிக் கொண்டிருந்த தாயையும், குழந்தையையும் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை என்பது சமுதாய அக்கறை மறைந்து, மக்களின் அன்றாட வாழ்க்கை இயந்திரத்தனமாக மாறி விட்டதையே காட்டுகிறது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நகரின் முக்கிய சாலையில் நிகழ்ந்த இந்தக் கோர விபத்து, அங்கு பொறுத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியிருக்கிறது.
இந்த விபத்து நிகழ்ந்ததை கண்காணிப்புக் கேமரா மூலம் பார்த்த அதிகாரிகள், உடனடியாக முதலுதவி அளிக்க நடவடிக்கை எடுத்திருந்தால், ரெய்கரின் மனைவியும், குழந்தையும் காப்பாற்றியிருக்கலாம் என தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த சம்பவத்தில், சாலைக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் உரிய முறையில் செயல்பட்டு நடவடிக்கை எடுத்திருந்தால், விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்பது மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மகளிர் அமைப்பினரின் கருத்தாகும்.