பாபர் மசூதி இடிப்பில் அத்வானிக்கு முலாயம் மறைமுக உடந்தை: மீண்டும் பேனி புது குண்டு!
சர்ச்சைகள் என்ன?
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவரும் மத்திய அமைச்சருமான பேனிபிரசாத் வர்மா அண்மைக்காலமாக தொடர்ந்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவை விமர்சித்து வருகிறார். முலாயம்சிங் யாதவுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது, முலாயம் ஒரு கொள்ளைக்காரர் என்று விமர்சித்தார். இதனால் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவை சமாஜ்வாடி கட்சி திரும்பப் பெறக் கூடிய நிலை உருவானது. பின்னர் ஒருவழியாக அந்த விவகாரம் ஓய்ந்தது. பின்னர் சமாஜ்வாடி கட்சிக்கு வரும் லோக்சபா தேர்தலில் 4 தொகுதிகள் தான் கிடைக்கும்.. அதுதான் அந்த கட்சிக்கான சவ ஊர்வலம் என்று இன்னொரு எல்லைக்குப் போய் விமர்சித்திருந்தார்.
தற்போது முலாயம்சிங், பாஜக தலைவர் அத்வானியை அவ்வப்போது புகழ்ந்து பேசி வருகிறார். இதனால் பாஜகவுடன் சமாஜ்வாடி கூட்டணி அமைக்குமா?அல்லது முலாயம்சிங் தலைமையில் 3-வது அணி உருவாக்கப்பட்டு அது பாஜகவை ஆதரிக்குமா?என்ற யூகங்கள் உலா வந்தன.
பாபர் மசூதி இடிப்பில் அத்வானி- முலாயம்சிங்
இந்நிலையில் லக்னோவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பேனிபிரசாத் வர்மா, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் பூஜைகள் செய்வதற்காக ரத யாத்திரையை அத்வானி தொடங்கினார். அந்த யாத்திரைக்கு அப்போது முதல்வராக இருந்த முலாயம் சிங் மறைமுகமாக உடந்தையாக இருந்தார். கடந்த 1990-ல் அயோத்தியில் போலீசார் துப்பாக்கி சூடு மேற்கொண்டது தேவையில்லாதது. விருந்தினர் மாளிகையில் காவலில் இருந்த அத்வானி, வினய் கட்டியார், போன்றவர்களை முலாயம் சிங் சந்தித்துப் பேசினார். அப்போது தான் சர்ச்சைக்குரிய இடத்தில் கரசேவகர்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டது.
மோடி நல்லவரா, அத்வானி நல்லவரா என்ற விவாதம் எழுந்துள்ளது. இருவருமே நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை சிதைத்தவர்கள். பாபர் மசூதி இடிப்புக்கு பின் ஏற்பட்ட கலவரங்களுக்கு அத்வானியும், குஜராத்தில் ஏற்பட்ட கலவரங்களுக்கு மோடியும் தான் பொறுப்பு.வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் 45 தொகுதிகளை காங்கிரஸ் வெல்லும். பகுஜன் சமாஜ் 26 தொகுதிகளை கைப்பற்றும், பா.ஜ.கவுக்கு வெறும் 5 தொகுதிகளும், சமாஜவாதி கட்சிக்கு 4 தொகுதிகளும் மட்டுமே கிடைக்கும். வரும் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு, உத்தரப் பிரதேச மாநில அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் என்றார் அவர்.