கிரிக்கெட் ஒளிபரப்பு விவகாரம்: ரூ400 கோடியை டெபாசிட் செய்ய 3 வங்கிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
டெல்லி: கிரிக்கெட் ஒளிபரப்பு விவகாரத்தில் ரூ400 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று 3 வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு என்ன?
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் நிம்பஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. ரூ.2000 கோடிக்கான இந்த ஒப்பந்தம் 2010 முதல் 2014-ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டு இருந்தது. நிம்பஸ் நிறுவனம் சார்பில் பஞ்சாப் நேசனல் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய 3 வங்கிகள் உத்தரவாதம் அளித்து இருந்தது.
ஆனால் கிரிக்கெட் வாரியத்துக்கு நிம்பஸ் நிறுவனம் முறையாக பணம் அளிக்காததால் ஒளிபரப்பு உரிமைகளை 2011-ம் ஆண்டு ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து உத்திரவாத தொகையான ரூ.1,600 கோடியை கிரிக்கெட் வாரியத்துக்கு அளிக்கவும் வங்கிகள் மறுத்தன. இதை எதிர்த்து கிரிக்கெட் வாரியம் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
3 வங்கிகளும் ரூ.400 கோடியை உயர்நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினை முடிந்த பிறகு அந்த பணம் வங்கிகளுக்கு திருப்பி அளிக்கப்படும் என்றும் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தொகை மீண்டும் வங்கிகளுக்கு அளிக்ககூடாது என்று கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
இதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்துக்கு இந்த வழக்கு போனது. அப்போது, 3 வங்கிகளும் ரூ.400 கோடியை மும்பை உயர்நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். பின்னர் அந்த தொகை கிரிக்கெட் வாரிய கணக்கில் செலுத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது