நெல்லை, தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை: இடி தாக்கி 2 பேர் பலி
நெல்லை: நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று மாலை இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் இடி தாக்கி 2 பேர் பலியானார்கள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலை தாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து ஓரளவு குளிர்ச்சியாக இருந்தது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, களக்காடு, ஏர்வாடி, நாங்குநேரி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் கன மழை பெய்தது. இதில் களக்காட்டில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மாடு மேய்த்துக் கொண்டிருந்த களக்காட்டைச் சேர்ந்த ஆறுமுகம்(37), கீழநீலிதநல்லூர் நாராயணபுரத்தை சேர்ந்த தொழிலாளி சந்திசேகர் (35) ஆகியோர் இடி தாக்கி பலியானார்கள்.
சூறைக்காற்றால் களக்காடு, ஏர்வாடி, திருக்குறுங்குடி பகுதியில் உள்ள சுமார் 2 லட்சம் வாழை மரங்கள் சாய்ந்தன. மேலும் தென்னை, பனை, புளிய மரம், வேப்பமரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தன. இது தவிர மாவடியில் 25க்கும் மேற்பட்ட டிவிக்கள் மின்னல் தாக்கி சேதம் அடைந்தன.
பாளை பேருந்து நிலையம் அருகே இருந்த புளிய மரம் வேரோடு சாய்ந்தது. இது தவிர உழவர் சந்தை அருகே இருந்த பழமையான மரம் ஒன்று முறிந்து நடுரோட்டில் விழுந்தது. சுத்தமல்லி தீன் நகரில் புதிதாக கட்டப்படும் 2 வீடுகளின் செப்டிக் டேங்க் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ், விக்கி, சுபாஷ் ஆகிய 3 சிறுவர்கள் காயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, சாத்தான்குளம், நாசரேத், திசையன்விளை உள்ளிட்ட பல பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.