20 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.. நாளை ஜெ. தொடங்கி வைக்கிறார்: நல்ல திட்டம் தான், ஆனால்!
நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் ஏழைகள், நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ரேசன் கடைகளில் ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு விற்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த புதிய திட்டம் நாளை தொடங்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9.30 மணிக்கு நந்தனம் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கு வணிகத்தில் இதற்கான விழா நடக்கிறது. நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகளில் இந்த 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி நாளை முதல் வழங்கப்படும்.
முதல் கட்டமாக சென்னை நகரில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் 50 ரேஷன் கடைகளிலும், கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் 50 ரேஷன் கடைகளிலும் 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யப்படும். 5 கிலோ, 10 கிலோ, 25 கிலோ கொண்ட பைகளில் அரிசி அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.
இப்போது கொஞ்சம் நல்ல அரிசி என்றால் கிலோ ரூ. 45 என்ற அளவில் தான் விலை நிலவரம் உள்ளது.
இந்த 20 ரூபாய் அரிசி நிச்சயம் மக்களுக்கு நலன் பயக்கும் என்பது உண்மையே. ஆனால், இதிலும் கடத்தல், கலப்படம் நடந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதே போல இதை வாங்க நிச்சயம் கூட்டம் அலை மோதும். அந்த நெரிசலைத் தவிர்க்கவும், இங்கே வாங்கி வெளியே 35 ரூபாய்க்கு விற்றுவிட்டு டாஸ்மாக் பக்கம் ஒதுங்கும் ஆசாமிகளின் கை அங்காடிகள் பக்கம் ஓங்கிவிடாமலும் அரசே பார்த்துக் கொள்ள வேண்டும்.