கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் தீ: மின் உற்பத்தி பாதிப்பு; மின் தடை நேரம் மேலும் அதிகரிப்பு?
கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் 2 யூனிட்களில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த 2 யூனிட்களில் தயாரிக்கப்படும் மின்சாரம் உயர் அழுத்த டிரான்பார்மர்களில் சேமிக்கப்பட்டு வெளி இடங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. 2வது யூனிட்டில் உள்ள 180 மெகாவாட் டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு பணி காரணமாக கடந்த மாதம் 3ம் தேதி முதல் அந்த யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பராமரிப்பு பணிகள் முடிந்து நேற்று 2வது யூனிட்டில் மின் உற்பத்தி துவங்கியது. இரவு 10 மணி அளவில் சுமார் 10 மெகாவாட் மின்சாரம் டிரான்ஸ்பார்மரில் பாய்ந்தது. அப்போது டிரான்ஸ்பார்மரில் இருந்த எண்ணெய் டேங்க் திடீர் என்று வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டு ரசாயணப் பொடி தூவி தீ அணைக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
பழுதடைந்துள்ள டிரான்ஸ்பார்மரை சரிசெய்ய 20 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் 2வது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. புதிய டிரான்ஸ்பார்மர் மகாராஷ்டிராவில் இருந்து வர வேண்டும் என்று அணு மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்த விபத்தால் அணு உலைக்கோ, மின் உற்பத்திக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை. அதனால் பொது மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றார்.