பாஸ்டன் குண்டுவெடிப்பு எதிரொலி: உஷார் நிலையில் அமெரிக்கா, லண்டன்
நியூயார்க்: பாஸ்டனில் இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து 3 பேர் பலியானதையடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் இன்று மாரதான் போட்டி நடந்தது. போட்டி முடிவடையும் இடமான கோப்லி பிளாசாவில் இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் பலியாகினர், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
சம்பவ இடத்தில் ரத்தக் கறை, உடல் பாகங்கள் சிதறிக் கிடந்ததைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. காயம் அடைந்தவர்கள் வலியால் கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
குண்டு வைத்தது யார்?
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. முஸ்லீம் போராளிகள் அல்லது அமெரிக்க அரசுக்கு எதிரானவர்கள் யாராவது இதை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
விசாரிக்கு சிஐஏ, எப்.பி.ஐ.
குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி சிஐஏ, எப்.பி.ஐ. மற்றும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.
எம்பயர் பில்டிங், டைம்ஸ் சதுக்கத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
பாஸ்டன் சம்பவத்தையடுத்து எம்பயர் கட்டிடம், டைம்ஸ் சதுக்கம் உள்ளிட்ட அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ், வாஷிங்டன், சான் டியாகோ, லாஸ் வேகாஸ், டெட்ராய்ட், அட்லாண்டா, கலிபோர்னியா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
உஷார் நிலையில் அதிபர் மாளிகை
பாஸ்டன் குண்டுவெடிப்பை அடுத்து அதிபர் ஒபாமா தங்கியிருக்கும் வெள்ளை மாளிகையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
லண்டன் மாரதான்
வரும் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் மாரதான் போட்டி நடக்கிறது. பாஸ்டன் மாரதானை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால் இங்கிலாந்து போலீசார் லண்டன் மாரதானுக்கு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுபரிசீலனை செய்கின்றனர்.
ஃபேஸ்புக், டுவிட்டர் கண்காணிப்பு
குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.