சஞ்சய் தத் சரணடைய மேலும் 4 வாரம் அவகாசம்- உச்சநீதிமன்றம்

1993-ம் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், ஆயுதங்கள் பதுக்க உதவியதாக நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதில் 18 மாதங்களை சிறையில் கழித்துவிட்ட அவர், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதில் அவருக்கான தண்டனைக் காலம் 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
இன்னும் மூன்றரை ஆண்டுகளை அவர் சிறையில் கழித்தாக வேண்டும். இதில் அவர் ஏப்ரல் 18-ம் தேதிக்குள் போலீசில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகக் கூறிய சஞ்சய் தத், தான் சரணடைய மேலும் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். தன்னை நம்பி ரூ 278 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு சரணடைவதாகவும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதின்றம், சஞ்சய் தத்துக்கு மேலும் 4 வார காலம் அவகாசம் அளித்துள்ளது.
தனது தீர்ப்பில், "இதற்கு மேல் சஞ்சய் தத் எந்த அவகாசமும் கோரக் கூடாது. அதற்கு அவருக்கு உரிமையில்லை," என்று கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இந்த தீர்ப்புக்கு நீதிமன்றத்திலேயே சிபிஐ கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தது. அதேநேரம், ஏன் நீங்கள் சஞ்சய் தத் மனுவை ஆட்சேபித்து மனு தாக்கல் செய்யவில்லை என்ற நீதிபதியின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications