மூன்றாம் கட்ட நடை பயணம்… கண்ணீர் மல்க மக்களுக்கு நன்றி சொன்ன வைகோ
பொள்ளாட்சி: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மூன்றாம் கட்ட பயணத்தை தொடங்கியுள்ள வைகோவிற்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. வழி நெடுகிலும் பொதுமக்களின் வரவேற்புக்கு கண்ணீர் மல்க வைகோ நன்றி தெரிவித்தார்.
இளைய சமுதாயம் சீரழிவிற்கு மதுவே காரணம் எனவே தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பொள்ளாச்சியில் இருந்து ஈரோட்டுக்கு நேற்று மூன்றாம் கட்ட நடைபயணத்தை வைகோ தொடங்கியுள்ளார்.
இதன் தொடக்கவிழா பொதுக்கூட்டம் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நடைபயணத்தை பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் தொடங்கிவைத்தார்.

நேற்றைய நடைபயணம் இரவு கோட்டூரில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, மதுவினால் அரசுக்கு கிடைக்கும் வருமானம் தேவையற்றது. இன்றைக்கு மாணவர்கள் கூட மதுவிற்கு அடிமையாகிக் கிடக்கின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நடைபயணத்தை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இரண்டாம் நாளான இன்று கோட்டூர் மலையாண்டி பட்டணத்தில் இருந்து நடந்து சென்ற வைகோ, வெயில் கடுமையால் பூவலப்பருத்தியில் உள்ள தோட்டத்தில் இளைப்பாறினார்.
அப்போது அங்கு வந்த ஊர் பொதுமக்கள் வைகோவிற்கு ஆதரவாக பேசினர். மக்கள் திருந்த வேண்டும் என்பதற்காக நடைபயணம் மேற்கொண்டுள்ள நீங்கள் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்று வாழ்தினார். பள்ளி மாணவர்கள் கைகுலுக்கினர். அவர்களுக்கு வைகோ கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஏற்கனவே மதுவிலக்கு கோரி இரண்டு கட்ட நடைபயணம் மேற்கொண்ட வைகோ மூன்றாவது கட்டமாக 13 நாட்கள் நடைபயணத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications