இந்தியாவில் சிறுமிகள் பாலியல் கொடுமை... 10 ஆண்டுகளில் 336 சதவிகிதம் அதிகம்
டெல்லி: இந்தியாவில் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 336 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறி அதிரவைக்கிறது தேசிய குற்றப்பிரிவு அமைப்பின் புள்ளிவிபரம்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பின் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் 3 வயது முதல் 10 வயது வரை உடைய சிறுமிகளும் அதிக அளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அதுபற்றி அதிர்ச்சிகரமான புள்ளிவிபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது தேசிய குற்றப்பிரிவு ஆணையம்.
சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக, கடந்த 2001-ஆம் ஆண்டு பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 113. இதுவே 2011-ஆம் ஆண்டு 48 ஆயிரத்து 338 ஆக அதிகரித்துள்ளது.
மத்தியபிரதேசம் நம்பர் 1
மத்திய பிரதேச மாநிலத்தில் அதிகப்படியாக 9 ஆயிரத்து 465 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 6 ஆயிரத்து 868 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
டெல்லியில் 2,909 வழக்குகள்
தலைநகர் டெல்லியில் 2ஆயிரத்து 909 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் கேரளாவில் 2 ஆயிரத்து 101 வழக்குகளும், ஆந்திராவில் 3 ஆயிரத்து 977 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1,486 வழக்குகள்
தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்து 486 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 41 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் சிறார் குற்றவியல் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவை ஆகும்.
5 வயது சிறுமி பாதிப்பு
டெல்லி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை இரண்டு நாட்களாக அறைக்குள் பூட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.
பிரதமர் மன்மோகன் சிங் கவலை
இதனிடையே 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருப்பதும், அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதும் தன்னை மிகவும் வேதனையடையச் செய்திருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனைக்கு ஆழமான தீர்வு காண்பதும் அதற்காக சமூகம் தன்னைத்தானே தயார்படுத்திக்கொள்வதும் அவசியம் என பிரதமர் கூறியுள்ளார்.