ரூ.27 ஆயிரம் கோடி இழப்பு: அஜித்பவார் ராஜினாமா செய்ய ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்
மும்பை: நீர்ப்பாசன திட்டங்களில் ரூ.27 ஆயிரம் கோடி இழப்பை தொடர்ந்து மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரீத்தி ஷர்மா மேனன் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய போது,
27 ஆயிரம் கோடி நஷ்டம்
மகாராஷ்டிராவில் நீர்ப்பாசன திட்டங்களில் ரூ.27 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரியவந்து உள்ளது. ரூ. 7 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்பட வேண்டிய நீர்ப்பாசன திட்டங்களை தாமதப்படுத்தியதன் காரணமாக இந்த அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டு இருக்கிறது
ஊழல் புகார்
நிறுவனம் ஒன்றிடம் இருந்து லஞ்சம் வாங்கப்பட்டதும் அறிக்கையின் மூலம் தெரியவந்து உள்ளது. நீர்ப்பாசன திட்டங்களில் ஏராளமாக முறைகேடு நடந்து உள்ளது. இதற்கு நீர்ப்பாசன இலாகாவை கவனித்து வரும் துணை முதலமைச்சர் அஜித் பவார் பொறுப்பு ஏற்க வேண்டும். அவர் இனியும் பதவியில் நீடிக்க தகுதியற்றவர். உடனடியாக அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
நீதி விசாரணை
மேலும் நீர்ப்பாசன ஊழலில் அஜித்பவாரின் பங்கு பற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடைபெற வேண்டும். திட்டங்களை நிறைவேற்றுவதில் தவறான திட்டமிடுதல் காரணமாக அரசின் கருவூலத்துக்கு மட்டும் வறட்சி ஏற்படவில்லை. நமது மண்ணுக்கும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. நீர்ப்பாசன திட்ட ஊழலில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர். ஊழல் அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.