சிவந்தி ஆதித்தன் மறைவு - முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல்

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தி:
தினத்தந்தி நாளிதழின் அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 19-ந் தேதி (நேற்று) இரவு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
தினத்தந்தி நாளிதழ் மூலம் தமிழகத்தில் பாமரரும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன். இவர் ஒர சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்.
இவர் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக திறம்பட பணியாற்றியது மிகவும் குறிப்பிடத்தக்கது. இவர் பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர்.
பேரிழப்பு
எளிமையானவரும் பழகுவதற்கு இனிமையானவருமான டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனின் மறைவு பத்திரிகைத் துறை மற்றும் விளையாட்டுத் துறைக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வைகோ
மதிமுக பொதுச் செயலர் வைகோ விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "தமிழர் வரலாற்றின் புகழ்மிக்க அங்கமான தினத்தந்தி ஏட்டின் அதிபர் ஐயா சிவந்தி ஆதித்தன் மறைந்தார் என்ற செய்தி, ஈட்டியாய் என் இதயத்தில் பாய்ந்தது. என் செவிகளையே என்னால் நம்ப முடியவில்லை.
எழில் சிந்தும் புன்னகையுடன் அனைவரையும் காந்தமெனக் கவர்ந்த உத்தமராம் ஐயா சிவந்தி ஆதித்தன், தமிழர் தந்தை ஐயா ஆதித்தனார் தொடங்கிய தினத்தந்தி ஏட்டை, தமிழ் கூறும் நல் உலகத்தி் காப்பரணாகவும், கலங்கரை விளக்கமாகவும் நடத்தி வந்தார்.
பேரொளி அணைந்தது
வலது கை கொடுப்பது இடது கை அறியாத கொடை உள்ளத்தால், பல்லாயிரக் கணக்கான குடும்பங்களை வாழ வைத்தார். விளையாட்டுத் துறையில் இந்தியாவின் கைப்பந்தாட்டத்தை உலகளாவிய தகுதிக்கு தன்னுடைய முயற்சியாலும், சொந்த பொருட்செலவினாலும் உயர்த்திய உத்தமர் ஆவார்.
பல ஆண்டுகளாக அந்த உன்னதமானவரின் நேசத்தைப் பெற்ற நான், அவர் உடல் நலிந்த செய்தி கேட்ட நாள் முதல் துயரத்தால் துடித்தேன். எப்படியும் நலம் பெற்றுவிடுவார் என்றே ஏங்கி இருந்தேன். ஆனால் அந்தப் பேரொளி அணைந்துவிட்டது. இந்திய பத்திரிகை உலகின் இமயமாய் ஓங்கி இருந்த அப்பெருந்தகையாளர் மறைந்த செய்தி பேரிடியாய் தலையில் விழுந்துவிட்டது. அந்தப் புகழ் மாமனிதரின் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது. இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, தமி்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பத்திரிகை துறைக்கும் விளையாட்டுத் துறைக்கும் ஜனநாயகத்துக்கும் காப்பரணாக திகழ வேண்டியவரை இரக்கமற்ற காலன் பறித்துக்கொண்டான்.
மண்ணை விட்டு அவர் மறைந்தாலும் அவரது பெயரும் புகழும் விண் இருக்கும் மட்டும் நிலைத்திருக்கும். அவரது மறைவால் கண்ணீரில் துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், தினத்தந்தி நிறுவனத்தின் அனைத்துத் துறைகளிலும் இயங்குகின்ற சகோதரர்கள் அனைவருக்கும் ம.தி.மு.க. சார்பில் பொங்கி வரும் கண்ணீருடன் என் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications