பெண்கள் பாதுகாப்பாக இருக்க மது ஒழிக்கப்பட வேண்டும்.... பள்ளி மாணவிகள் மத்தியில் பேசிய வைகோ
உடுமலை: பள்ளிச் சிறுமிகளும், இளம் பெண்களும் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாட்டில் மது பூரணமாக ஒழிக்கப்படவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பொள்ளாச்சியில் தொடங்கி ஈரோடு வரை வைகோ நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பயணம் 5வது எட்டியுள்ளது. நான்காம் நாளான நேற்று உடுமலைப்பேட்டையில் நடந்து சென்றார். தளிரோடு, பஸ் நிலையம் பகுதி வழியாக கணியூரை நோக்கி பழனி ரோட்டில் சென்றபோது, காந்திநகர், அண்ணாகுடியிருப்பு உள்பட வழி நெடுகிலும் ஆங்காங்கு பெண்களும், ஆண்களும் திரண்டு நின்று வைகோவை வரவேற்றனர்.
நான் அரசியல் வாதியாக இந்த நடைபயணத்தை மேற்கொள்ளவில்லை. மதுவால் பெண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தான் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். சாதி, மதம், கட்சிக்கு அப்பாற்பட்டு இந்த நடை பயணம் மேற்கொண்டுள்ளேன். எனது பேத்திகள் போன்ற சிறுமிகள், மாணவிகள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க மது ஒழிக்கப்பட வேண்டும்.
நீங்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நல்ல உடல் நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன். உங்களை போன்ற பெண்களின் பாதுகாப்பிற்காக மது ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன் என்றார்.
அவரது பேச்சை மாணவிகள், ஆர்வத்துடன் கேட்டனர். இதைதொடர்ந்து சிறிது தூரம் சென்றதும் ஸ்ரீஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி பேராசிரியைகள் கல்லூரி நுழைவு வாயில் அருகே ரோட்டு ஓரம் நின்று கொண்டு வைகோவின் வருகைக்காக காத்து நின்றனர். அவர்களை கண்டதும் வைகோ அங்கு வந்து, ‘மது ஒழிக்கப்படாவிட்டால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்காமல் போகும் நிலை உள்ளது. மதுவால் பல குடும்பங்கள் சீரழிகிறது அதனால்தான் மதுவை ஒழிக்க வலியுறுத்தி நடைபயணம் செல்கிறேன்' என்றார். அப்போது பேராசிரியைகள் மதுவை ஒழிக்க உங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறோம் என்றனர்.
நடை பயணத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், முன்னாள் எம்.பி.யான டாக்டர் சி.கிருஷ்ணன், நா.லோகநாதன், ம.காளிமுத்து, ஆர்.ஆர்.வேலாயுதசாமி, இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.