பெங்களூர் குண்டுவெடிப்பு: தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு போலீஸ் காவல்-மேலும் 5 பேரிடம் விசாரணை
பெங்களூர்: பெங்களூர் மல்லேஸ்வரத்தில் பாரதிய ஜனதா அலுவலகம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
பாஜக அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிள் ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது. இதில் 17 பேர் படுகாயமடைந்தனர். குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் பதிவு எண் தமிழகத்தைச் சேர்ந்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டது 'பைப் வெடிகுண்டு'. இதே ரக வெடிகுண்டுதான் மதுரையிலும் சிக்கியது. இதனால் கர்நாடகா தனிப்படை போலீசாரும் தேசிய புலனாய்வு அமைப்பினரும் தமிழகத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினர்.
தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது
குண்டுவெடிப்பு நடந்த நாளில் சென்னை தில்லை கங்கா நகரைச் சேர்ந்த 'சங்கர நாராயணன்' என்பவருக்கு சொந்தமான வண்டி என ஊடகங்கள் பேட்டி எடுத்து செய்திகளை வெளியிட்டன. ஆனால் தற்போது "மோட்டார் சைக்கிள் பலரது கைமாறி விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது" என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்த மோட்டார் சைக்கிள் குண்டு வெடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் கோவையில் இருந்து பெங்களூர் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனடிப்படையில் சென்னையில் பீர் முகைதீன், பசீர் அகமது ஆகியோரும் மதுரையில் கிச்சன் புகாரி என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பெங்களூர் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதன் பிறகு நேற்று இரவு பெங்களூர் கெலமங்களாவில் மாஜிஸ்திரேட் முன்பு மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 3 பேரையும் 14 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் அனுமதி கோரினர். இதை ஏற்ற மாஜிஸ்திரேட் மூவரையும் மே 6ம் தேதி வரை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுத்தார்.. இதை தொடர்ந்து போலீசார் மூவரிடமும் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் 5 பேரிடம் விசாரணை?
இதனிடையே பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் மண்ணடி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 5 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு
போலீசாரின் இந்த தொடர் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் தமிழக காவல்துறை தலைவரை இன்று நேரில் சந்தித்து முறையிட்டனர். சில அரசியல் இயக்கதலைவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள்தான் இந்த கைது நடவடிக்கைக்குக் காரணம் என்றும் அவர்கள்தான் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்புவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.