தேசிய, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை; சாதிக் கூட்டணி தான்: அன்புமணி
சித்ரா பெளர்ணமியையொட்டி மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் சங்கப் பெருவிழா மாநாட்டில் பேசிய அவர்,
பிரிந்து கிடந்த வன்னியர் சங்கங்களை ஒன்றிணைத்து பல போராட்டங்களை நடத்தினோம். 21 உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம். ஆனால் அதற்கு பலன் இல்லை. நமக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும். ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள வேண்டும் என்றுதான் பாமகவை டாக்டர். ராமதாஸ் தொடங்கினார்.
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு வந்தோம். இத்தனை ஆண்டுகளாக இட ஒதுக்கீடுக்காக, ஒரு சிறிய கையெழுத்துக்காக பல முதல்வர்களிடம் காத்திருந்தோம்.
2016ம் ஆண்டு தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும். இனி நாமே இட ஒதுக்கீட்டை எடுத்துக் கொள்வோம். அதே போல மற்ற சமுதாயத்தினருக்கும் இட ஒதுக்கீடு வழங்குவோம். ஒவ்வொரு சமுதாயத்துக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு அளிப்பது நமது லட்சியம்.
தமிழகத்திலுள்ள நம் அத்தனை சொந்தங்களும் வாக்களித்தால் 2016ம் ஆண்டு பாமக ஆட்சி அமையும்.
தமிழகத்தில் 46 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து தமிழக மக்களை நாசம் செய்துவிட்டன. சாராயம், இலவசம், சினிமா இவைதான் இன்றுவரை திராவிடக் கட்சிகள் செய்த சாதனை. இலவசம் என்பது பிச்சை. கருணாநிதி ரூ.1க்கு அரிசி வழங்கினார். ஜெயலலிதா ரூ.1க்கு இட்லி வழங்குகிறார்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் இலவசம், மானியத்துக்கு மட்டும் 40 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை, மருத்துவம், கல்வி, மின்சாரத்துக்கு திட்டங்கள் இல்லை. தமிழக அரசுக்கு ரூ.1,55,129 கோடி கடன் உள்ளது. அதாவது ஒரு நபர் மீது ரூ. 21,515. 89 பைசா என்ற அளவில் கடன் உள்ளது. இவ்வளவு கடனும் இலவசங்களை வழங்குவதற்காக வாங்கப்பட்டவை.
ஒரு முறை பாமகவை ஆட்சியமைக்க அனுமதித்தால் ஓராண்டில் கடனை அடைப்போம்.
திராவிட கட்சிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது அடுத்தது யார்? அதுதான் பாமக.
நான் போனை எடுத்தால் கிளின்டன், ஹிலாரி கிளின்டன், பில் கேட்சுடன் பேச முடியும். நோபல் பரிசு வென்ற 4 பேர் என் நண்பர்கள். உலகம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறேன். அந்த நாடுகளில் உள்ள நல்ல திட்டங்களை தமிழகத்திலும் செயல்படுத்த ஆசைப்படுகிறேன்.
நான் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்தேன். இதைப் பாராட்டாத உலகத் தலைவர்களே இல்லை. நான் சொன்னால் தமிழகத்தில் முதலீடு செய்ய பலர் தயாராக இருக்கிறார்கள். அதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
தமிழகத்தில் எந்தக் கட்சிக்காவது தனித்துப் போட்டியிட தைரியம் உள்ளதா, ஒரு பைசா செலவு செய்யாமல் தேர்தலை சந்திக்கத் தயாரா.. பாமக சார்பில் சவால் விடுகிறேன்.
தமிழகத்தில் எந்தக் கட்சித் தலைவராவது தனது தொண்டர்களைப் பார்த்து 'என் சொந்தங்களே' என்று அழைக்க முடியுமா. அதைச் செய்யக் கூடிய ஒரே தலைவர் ராமதாஸ் தான்.
எங்களுக்கு 10 எம்பிக்களைக் கொடுங்கள். (தலித்களுக்கு ஆதரவான) வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து காட்டுகிறோம் என்றார் அன்புமணி.
இந்த மாநாட்டில் பிராமணர் சமூகத்தில் ஆரம்பித்து கவுண்டர், தேவர் உள்ளிட்ட பல்வேறு ஜாதிகளின் பிரதிநிதிகளும் இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதியும் பேசினர்.