எதியூரப்பாவை பாஜகவில் மீண்டும் சேர்க்க உமாபாரதி விருப்பம்
பெங்களூர்: பாஜகவை விட்டு வெளியேறி தனிக்கட்சி தொடங்கியிருக்கும் கர்நாடகா ஜனதா கட்சியின் தலைவர் எதியூரப்பாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டிருக்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவர் உமாபாரதி.
கர்நாடக சட்டசபைத் தேர்தலையொட்டி மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் உமாபாரதி. பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய உமாபாரதியிடம், எதியூரப்பாவை மீண்டும் பாஜகவுக்கு கொண்டு வருவீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அவர், நாடு இப்போது சிக்கலில் இருக்கிறது. அனைவருமே இணைந்து செயல்பட வேண்டும். பாஜக பலவீனமடைந்து போனால் நாடு பலவீனமடைந்துவிடும். நான் எதியூரப்பாவுடன் மிக நெருக்காமக இருந்தேன். அவர் எனது மூத்த சகோதரரைப் போன்றவர். அவர் ஒரு ஸ்யம்சேவக். நாடுதான் முக்கியம். நான் அதன் பின்புதான்.. ஈகோவை விட்டுத் தள்ள வேண்டும். தனிப்பட்ட வேற்றுமைகளை பெரிதாக கருதாமல் அவரை மீண்டும் பாஜகவில் சேர்த்துக் கொள்வது பற்றி கட்சியின் முக்கிய தலைவர் சிந்திக்க வேண்டும். நான் மூத்த தலைவர் அல்ல என்றார்.
இதைத் தொடர்ந்து எதியூரப்பா இல்லாமல் போனதால் பாஜக பலவீனமடைந்துவிட்டது என்று சொல்கிறீர்களா எனக் கேட்கப்பட்டது. அதற்கு, நான் அப்படி சொல்லவில்லை. பாரதிய ஜனதாவானது தொண்டர்களின் பலத்தைக் கொண்ட கட்சி. நான் பாஜகவை விட்டு விலகி வெளியே இருந்த போது நாட்டு நலனுக்கு சேவையாற்ற முடியவில்லை என்ற கவலை இருந்தது. பாஜகவை விட்டு வெளியேறிய ஒவ்வொருவரும் இதையே உணர்வார்கள் என்றார் உமாபாரதி.