அன்புமணி ராமதாஸ் மீது 2வது வழக்குப் பாய்ந்தது
மரக்காணத்தில் டிரைவர் பன்னீர் செல்வம் என்பவர் ஒரு கும்பலால் கல்வீச்சுக்குள்ளாக்கி கொடூரமாகக் கொல்லப்பட்டார். இதற்கு பாமகவைச் சேர்ந்தவர்களே காரணம் என்று குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு நாள் கூட்டத்தில் பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமதாஸ் மீது இதுவரை 6 வழக்குகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கில் மட்டுமே அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. மற்ற வழக்குகளில் இன்னும் கிடைக்கவில்லை. எனவே அவரால் உடனடியாக வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல, சித்திரை விழாவி்ல நேரத்தைத் தாண்டி பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் மீது தற்போது இன்னும் ஒரு வழக்கு பாய்ந்துள்ளது.
அதாவது, மரக்காணத்தில் பன்னீர் செல்வம் படுகொலைக்கு, அன்புமணி ராமதாஸ் பிரிவிணைவாதத்தை தூண்டியதே காரணம் என்று திண்டிவனம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதாகர், பிரம்மதேசம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் அன்புமணி ராமதாஸ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அன்புமணியைக் கைது செய்து திண்டிவனம் கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.