பிரதமர் மன்மோகன்சிங்கை ராஜ்யசபா எம்.பி.யாக்க கடும் எதிர்ப்பு- அசாமில் போராட்டங்கள்!
குவஹாத்தி: அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக மீண்டும் பிரதமர் மன்மோகன்சிங்கை தேர்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில்தான் பிரதமர் மன்மோகன்சிங் வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.
பிரதமர் மன்மோகன்சிங்கின் எம்.பி. பதவிக்காலம் முடிவடைவதால் மே 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அவர் நேற்று அசாம் தலைநகர் குவஹாத்தியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவர் வேட்புமனு தாக்கல் செய்த இடத்தில் பத்திரிகையாளர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர். பிரதமர் வேட்புமனுத் தாக்கல் செய்வதை படம் எடுக்க அனுமதி கோரி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது முதல்வர் தருண் கோகய் தலையிட்டு சமாதானப்படுத்தியிருந்தார்.
இது ஒருபுறம் இருக்க, அசாம் மாநிலத்தில் இருந்து எம்.பியாக மன்மோகன்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஒரு பயனும் மாநிலத்துக்கு ஏற்படவில்லை என்று கூறி அனைத்து அசாம் மாணவர் ஒன்றியத்தின் சார்பில் குவஹாத்தி நகரில் போராட்டம் நடைபெற்றது. இதில் மன்மோகன்சிங்கைப் போல வேடமணிந்தவர்கள், அசாம் பிரச்சனையை தீர்க்க எந்த ஒரு நடவடிக்கையும் மன்மோகன்சிங் எடுக்கவில்லை என்று கூறி கண்டனம் தெரிவித்தனர்.
இதேபோல் பாஜக, ஆம் ஆத்மி, சிபிஐ (எம்.எல்) ஆகிய கட்சிகளும் அசாம் மாநில நலன்களை மன்மோகன்சிங் புறக்கணித்திருப்பதாகக் கூறி தனித் தனியே போராட்டங்களை நடத்தினர்.












Click it and Unblock the Notifications