ஃபேஸ்புக் பதிவர்களை உயர் போலீஸ் அதிகாரி அனுமதியின்றி கைது செய்யக் கூடாது: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கருத்துகளை பதிவிடுவோரை உயர் போலீஸ் அதிகாரியின் அனுமதி இல்லாமல் கைது செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
வழக்கு என்ன?
ஆந்திர மாநிலத்தில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த ஜெய விந்தியாலா என்பவர் ஃபேஸ்புக்கில் ஆந்திர முன்னாள் முதல்வரும் தமிழக ஆளுநருமான ரோசைய்யா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிருஷ்ண மோகன் ஆகியோரை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். கிருஷ்ணமோகனின் மோசடிகளுக்கு முதல்வராக இருந்த ரோசையா உடந்தை என்கிறது அந்தப் பதிவு. இதனால் கிருஷ்ணமோகனின் புகாரின் அடிப்படையில் விந்தியாலா கைது செய்யப்பட்டார்.
உச்சநீதிமன்றத்தில்..
இதை எதிர்த்து விந்தியாலா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் மும்பையை சட்டக்கல்லூரி மாணவி ஸ்ரேயா சிங்காலும் ஃபேஸ்புக்கில் பதிவிடுவதற்காக கைது செய்யப்படுவதை எதிர்த்து ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் கருத்துக்களுக்காக கைது செய்யும் விவகாரத்தில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி உயர் போலீஸ் அதிகாரியின் அனுமதியைப் பெற்றுதான் கைது செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.