அ.தி.மு.க அரசு 2 ஆண்டு நிறைவு: முக்கிய எதிர்கட்சிகள் புறக்கணிப்பு
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி 3வது முறையாக பதவி ஏற்று இன்றுடன் 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது இதையடுத்து, சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி பேசினர்.
சாதனை தொடரும்
இந்திய குடியரசுத் கட்சி் உறுப்பினர் செ.கு.தமிழரசன் பேசுகையில், "அசைக்க முடியாத மக்கள் சக்தியோடு ஈராண்டில் பல்லாண்டு சாதனை படைத்துள்ளார். மனித சமூகம் வாழும் வரை தமிழ் இனம் இந்த உலகில் இருக்கிற வரையில் புரட்சித் தலைவியின் சாதனைகள் தலைமுறை தலைமுறையாக தொடரும்" என்றார்.
கொங்கு இளைஞர் பேரவை
கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் தனியரசு, "மாணவர் சமுதாயம் நெசவாளர்கள், விவசாயிகள், மகளிர் என பல்வேறு தரப்பினருக்கும் திட்டங்கள் தீட்டி அவர்களது வாழ்க்கையை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் புரட்சித் தலைவியை பாராட்டுகிறோம்" என்றார்.
பார்வர்டு பிளாக் உறுப்பினர் கதிரவன், "காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது. கச்சத்தீவை மீட்க தீர்மானம் இயற்றியது என எண்ணற்ற சாதனை படைத்துள்ளார்" என்றார்.
சமக நாராயணன்
சமத்துவ மக்கள் கட்சி உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன், "அன்னிய முதலீட்டிற்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்று துணிவுடன் குரல் கொடுத்து தமிழக வணிகர்களை பாதுகாத்த பெருமை புரட்சித் தலைவியை சாரும். காவிரிப் பிரச்னையில் தொடர்ந்து போராடி தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிய பெருமை புரட்சித் தலைவிக்குத்தான் உண்டு" என்றார்.
மனிதநேய மக்கள் கட்சி
மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா, "இந்த ஆட்சியில் மக்கள் நலதிட்டங்கள் வேகமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. கச்சத்தீவை மீட்க தீர்மானம் இயற்றியது, காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது உள்பட பல்வேறு சாதனைகளை புரிந்த இந்த ஆட்சியை பாராட்டுகிறேன்" என்றார்.
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ
காங்கிரஸ் உறுப்பினர் ஜெ.ஜெ.பிரின்ஸ், "2 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை தந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை இந்த ஆட்சி பெற்றுள்ளது. மக்களுக்காக பாடுபடும் முதல்வரை மக்கள் மனதார பாராட்டுகிறார்கள்" என்றார்.
கம்யூனிஸ்ட் பாராட்டு
இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஆறுமுகம், "தமிழகம் இன்று அபரிமித வளர்ச்சியை நோக்கி சென்றுள்ளது. மலிவு விலை உணவகங்களை திறந்து ஏழை மக்களின் பாராட்டையும் பெற்றவர் முதல்வர். தமிழ் சமுதாயமே உங்கள் பின்னால் நிற்கும்" என்றார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சவுந்தரராஜன், "சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசே ஏற்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வந்தது துணிச்சலானது. இதேபோல் எண்ணற்ற சாதனைகளை செயல்படுத்தி வரும் இந்த ஆட்சியின் நடவடிக்கைகளை பாராட்டுகிறேன்" என்றார்.
புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் கிருஷ்ணசாமி,"கடந்த ஆட்சியில் எங்கு பார்த்தாலும் நில அபகரிப்பு நடந்தது. இன்று நில அபகரிப்பு இல்லை. இதற்காக முதல்வரை பாராட்டுகிறேன்" என்றார்.
புறக்கணித்த கட்சிகள்
இந்த பாராட்டு விழாவை தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உறுப்பினர்கள் புறக்கணித்தனர். ஆனால் தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், சுந்தரராஜன், அருண் பாண்டியன் உள்ளிட்ட 5 பேரும் வந்திருந்தனர். அவர்கள் முதல்வரை வாழ்த்தி பேசினர்.