வறட்சியால் வேலையிழப்பு.. டாஸ்மாக் வியாபாரம் 20 சதவீதம் சரிவு!!: கவலையில் அதிகாரிகள்!!!

கடந்த 2003ம் ஆண்டு முதல் டாஸ்மாக் மது விற்பனையை தமிழக அரசே கவனித்து வருகிறது. டாஸ்மாக் கடைகளில் ஆண்டுக்கு ஆண்டு விற்பனை அதிகரித்துக் கொண்டே தான் இருந்தது. 2013-2013ம் ஆண்டில் அதிகபட்சமாக ரூ.21680.67 கோடி வருமானம் கிடைத்தது. இதையடுத்து கடந்த நிதியாண்டில் ரூ.25,000 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டும் அதை எட்ட முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நடப்பாண்டிலும் இலக்கை எட்டுவது கடினம் என்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சி, மின்வெட்டு பிரச்சனையால் வேலை இழப்பு போன்ற காரணங்களால் தான் டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் கூறுகையில்,
கடந்த ஆண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் நாள் ஒன்றுக்கு 6,000 பெட்டி மதுபானங்கள் விற்றுத் தீர்ந்தன. ஆனால் நடப்பு ஆண்டிலோ வெறும் 4,500 பெட்டிகள் மற்றுமே விற்கிறது. கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.60 கோடிக்கு மது விற்பனை ஆகும். ஆனால் அது தற்போது ரூ.45 முதல் ரூ.48 கோடியாக குறைந்துள்ளது. கடந்த 6 மாத காலத்தில் மது விற்பனை சுமார் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.
கடந்த மாதம் திருச்சி, கோவை மண்டலத்தில் 8 சதவீதமும், சேலம், மதுரை, சென்னை மண்டலங்களில் 4 சதவீதமும் எதிர்மறை வளர்ச்சி உள்ளது. மழையில்லாமல் விவசாயம் முடங்கியுள்ளது. மின்வெட்டால் பலர் வேலை இழந்துள்ளனர். இதனால் மக்களிடம் பணப் புழக்கம் குறைந்துள்ளது. அதனால் டாஸ்மாக் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. நெடுஞ்சாலைகள் ஓரம் இருந்த டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றியதும் மது விற்பனை சரிய மற்றுமொரு காரணமாகும் என்றனர்.












Click it and Unblock the Notifications