இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்
நியூயார்க்: இறந்து விட்ட பெண் ஒருவருக்கு, ஆபரேஷன் மூலம் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த நொடி முதல் அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கிய அதிசயம் அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது.
அமெரிக்க மிசவுரி நகரில் வசித்து வருபவர் எரிக்கா நிக்ரெல்லி (32). இவர் ஆசிரியையாக, அங்குள்ள பள்ளியொன்றில் பணியாற்றி வந்தார். இவரது கணவர் நாத்தனும் அதே பள்ளியில் ஆசிரியரே.
நிறை மாத கர்ப்பிணியான எரிக்கா, கடந்த பிப்ரவரி மாதம் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார்.
கண்கள் இரண்டும் மேல்நோக்கி நிலைகுத்தியபடி, வாயில் இருந்து நுரை தள்ளிய மோசமான நிலையில் இருந்த எரிக்கா உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆஸ்பத்திரியில் எரிக்காவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதும் வயிற்றில் இருந்த குழந்தையை மட்டும் சிசேரியன் மூலம் அவசர அவசரமாக வெளியே எடுத்தனர். அதிர்ஷ்டவசமாக குழந்தையும் நன்றாகவே இருந்தது. பின்னர், எரிக்காவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்.
அப்பொழுது, எதிர்பாரா விதமாக எரிக்காவின் இதயம் துடிப்பதை டாக்டர்கள் அறிந்தார்கள். திகைத்து போன அவர்கள், உடனடியாக மேற்கொண்டு சிகிச்சை அளித்து எரிக்காவை காப்பாற்றினார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக ஆச்சரியம் தெரிவித்த டாக்டர்கள் ‘பத்தில் ஒன்பது பேர், முதல் கட்ட மாரடைப்பில் உயிரிழந்து விடுவார்கள். அபூர்வமாக எரிக்கா போல் சிலர் உயிர் பிழைக்கவும் வாய்ப்புள்ளது' என கூறினார்கள்.












Click it and Unblock the Notifications