முக்கிய ஆதாரங்களைத் தேடி மெய்யப்பன் வீட்டை அலசும் மும்பை போலீசார்
ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கி கைது செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனின் வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 பேர் கொண்ட மும்பை போலீஸ் குழு சோதனை நடத்தியது. அந்த சோதனையில் டைரி, விசிட்டிங் கார்டுகள், சென்னை அணியின் லோகோ உள்ள ஸ்டிக்கர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து மெய்யப்பனுக்கு சொந்தமான சொகுசு படகில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு செல்போன் சிக்கயது. ஆனால் பெட்டிங் கட்ட பயன்படுத்தப்பட்ட மேலும் 3 செல்போன்களும், சிம்கார்டுகளும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மும்பை போலீசார் நந்தனம் பகுதியில் உள்ள மெய்யப்பனின் வீட்டில் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அணியின் சிஇஓ மெய்யப்பன் கிடையாது என்று கூறப்பட்டாலும் முந்தைய சோதனையில் சிக்கிய பொருட்கள் அணிக்கும், அவருக்கும் உள்ள தொடர்பை தெள்ளத்தெளிவாகக் கூறுகிறது என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மெய்யப்பனின் வீட்டில் 7 மணிநேரம் சோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.