அம்மா உணவகங்களில் இன்று முதல் பொங்கல், எலுமிச்சை சாதம், சப்பாத்தி: துவங்கி வைக்கும் ஜெ.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் குறைந்த விலையில் பொங்கல், எலுமிச்சை சாதம் மற்றும் சப்பாத்தி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலம் துவங்கி வைக்கிறார். இது தவிர கோவை, மதுரை உள்பட 4 மாநகராட்சிகளில் அம்மா உணவகங்களை அவர் துவங்கி வைக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் ரூ.1க்கு இட்லி, ரூ.5க்கு சாம்பார் சாதம், ரூ.3க்கு தயிர் சாதம் வழங்கப்படுகிறது. இந்த உணவகங்கள் துவங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 1 கோடியே 85 லட்சம் இட்லிகளும், 37 லட்சம் சாம்பார் சாதங்களும், 25 லட்சம் தயிர் சாதங்களும் விற்றுள்ளன என்று கூறப்படுகிறது.
அம்மா உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பை கருத்தில் கொண்டு சென்னையில் இனி காலையில் ரூ.5க்கு பொங்கல், மதியம் ரூ.5க்கு எலுமிச்சை சாதம் அல்லது கறிவேப்பிலை சாதம், மாலையில் ரூ.3க்கு சாப்பதி வழங்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி இந்த வகை உணவுகள் இன்று முதல் விற்பனை செய்யப்படவிருக்கின்றன.












Click it and Unblock the Notifications