தவறான விளம்பரம் செய்யும் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சிறை: புதிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
பல்வேறு முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மத்திய அமைச்சரவை டெல்லியில் கூடியது. இந்த கூட்டத்தில் ரியல் எஸ்டேட் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ரியல் எஸ்டேட் துறையில் நாடு முழுவுதும் ஒரே மாதிரியான ஒழுங்குமுறை கடைபிடிக்கப்படும். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கட்டுமானப் பணியை துவங்கும் முன்பு அதற்கு தேவையான ஒப்புதல்களைப் பெற வேண்டும். அந்த ஒப்புதல்களை தங்கள் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்பது கட்டாயமாகிறது.
வீடுகளை கட்டும் முன்பே கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளின் படங்களைப் போட்டு விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களை கைது செய்ய இந்த மசோதா வழிவகை செய்கிறது. முதலில் அனைத்து ஒப்புதல்களையும் பெற்ற பிறகே ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் பணம் பெற வேண்டும். மேலும் ஒவ்வொரு கட்டுமானத் திட்டத்திற்கும் தனித்த தனியாக வங்கி கணக்குகள் பராமரிக்கப்பட வேண்டும் உள்ளிட பல்வேறு கட்டுப்பாடுகள் இம்மசோதாவில் உள்ளது.