அந்தரத்தில் நின்று போன ரோப் கார்கள்.. தவித்த பக்தர்கள்.. பழனியில் பரபரப்பு
பழனி: பழனி மலையில் இயக்கப்பட்டு வரும் ரோப் கார் திடீரென பழுதாகி நின்று விட்டதால் பக்தர்கள் அந்தரத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
பழனி முருகன் கோவில் தமிழகத்தின் மிகப் பிரபலமான கோவில். அதிக வருவாய் வரும் கோவிலுமாகும். இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வருகிறார்கள்.
மலைப் பாதை வழியாகவும் கோவிலுக்குப் போகலாம். ரோப் கார் மூலமும் கோவிலுக்குப் போகலாம். முன்பு வின்ச் இருந்தது. தற்போது இது ரோப் காருக்கு மாறியுல்ளது. வயதானவர்கள், சிறார்களுக்கு இந்த ரோப் கார் பெரும் வரப் பிரசாதமாக இருந்து வந்தது.

8 ரோப்கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நான்கு மேலே போகும், நான்கு கீழே வரும். இன்று காலையும் வழக்கம் போல ரோப் கார்கள் இயங்கத் தொடங்கின. எட்டு பெட்டிகளிலும் மொத்தமாக 16 பக்தர்கள் இருந்தனர். அப்போது திடீரென நடு வழியில் ஒரு ரோப்காரின் என்ஜின் செயலிழந்து போனது. இதனால் அது அப்படியே நின்று விட்டது. இதனால் மற்ற ரோப்கார்களும் நின்று விட்டன.
இதனால் பீதியடைந்த பக்தர்கள் சத்தம் போட்டு அலறினர். கோவில் ஊழியர்கள் ரோப் கார் என்ஜினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் போனது. போலீஸாரும் விரைந்து வந்தனர். பிரம்புக் கூடையை அனுப்பி ஒவ்வொருவராக பக்தர்கள் மீட்கப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications